Close
மார்ச் 7, 2026 9:02 மணி

செய்யாத குற்றத்திற்கு அமெரிக்கச் சிறையில் 43 ஆண்டுகள் கழித்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்

கொலைக் குற்றச்சாட்டில் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்டு 43 ஆண்டுகள் கழித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் “சுபு” வேதம் என்பவர், விடுதலைக்குப் பிறகு உடனடியாக அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பல பத்தாண்டுகளுக்கு முந்தைய நாடு கடத்தல் உத்தரவின் காரணமாக அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

64 வயதான சுப்ரமணியம் “சுபு” வேதம் என்பவர் 1980ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலைக்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.  டிசம்பர் 1980ல், 19 வயதான தாமஸ் கின்சர் பென்சில்வேனியாவின் சென்டர் கவுண்டியில் காணாமல் போனார்; ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் ஒரு புதைகுழியில், அவரது மண்டை ஓட்டில் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது.

கல்லூரி மாணவராகவும், கின்சரின் முன்னாள் அறைத் தோழராகவும்/வகுப்புத் தோழராகவும் இருந்த வேதம், 1982 இல் கைது செய்யப்பட்டு கொலைக்கு அவரைத் தொடர்புபடுத்தும் நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதிலும் ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில், புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார். பென்சில்வேனியா வரலாற்றில் இவ்வளவு காலம் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர்.

அக்டோபர் 3ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், 1980களில் நடந்த ஒரு பழைய போதைப்பொருள் வழக்கை காரணம் காட்டி குடியேற்ற அதிகாரிகள் அவரை உடனடியாகத் தடுத்து வைத்தனர். சுபு வேதம் தற்போது பென்சில்வேனியாவில் உள்ள மோஷனான் பள்ளத்தாக்கு செயலாக்க மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுபு வேதம் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, அவருடைய குடும்பத்தினர் இறுதியாக அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுபு வேதம் ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். வேதத்தின் பெற்றோர் அவர் சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்காகக் காத்திருந்து இறந்துவிட்டனர். இப்போது அவருக்கு அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி மற்றும் மருமகள்கள் மட்டுமே குடும்பம்.

சிறையில் இருந்தபோது, ​​வேதம் ஏராளமான கல்வி சாதனைகளைப் படைத்தார். அவர் எழுத்தறிவுத் திட்டங்களைத் தொடங்கினார், கைதிகள் டிப்ளோமாக்கள் பெற உதவினார், மேலும் அஞ்சல்வழி மூலம் உட்பட எம்பிஏ மூன்று பட்டங்களை முடித்தார்,. கடந்த 150 ஆண்டுகளில் மாநில சிறையில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் கைதி என்ற பெருமையைப் பெற்றார்.

அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவருக்கு அங்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அமெரிக்காவே அவருடைய ஒரே வீடு என்றும் அவருடைய குடும்பத்தினர் கூறுகின்றனர். அவருடைய அக்காள் சரஸ்வதி வேதம் மற்றும் உறவினர்கள் கூறுகையில், வேதம் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அமெரிக்காவில் கழித்தவர். அவருக்கு இந்த நாட்டில் ஒரு ஆதரவு அமைப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அவரது மருமகள் ஜோ மில்லர் கூறுகையில் “அவர் ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோதே இந்தியாவில் இருந்து வந்தார். அவருக்குச் சொந்தமான யாரும் அங்கு இல்லை. அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும், 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து தொழில்நுட்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வெகுவாக மாறிவிட்ட இந்த உலகில் வேதம் தன்னை மாற்றிக் கொள்ள குடும்ப உறுப்பினர்களின் உதவி தேவைப்படும் என்று கூறியுள்ளார்

தவறான தண்டனையால் இழந்த நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு, அவர் மீண்டும் தனது வாழ்க்கையைத் தொடங்க அமெரிக்காவில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் வாதிடுகிறார்.

சுபு வேதத்தை நாடு கடத்துவதைத் தடுக்க அவருடைய குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யுமாறு குடியேற்ற நீதிமன்றத்தை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சுபு வேதம் சிறையில் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடத்திக் கொண்டார் என்றும், அவர் சிறையில் இருந்த காலத்தில் கல்வியை மேற்கொண்டு சக கைதிகளுக்கு உதவினார் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

வேதத்தின் தாயார் வாரந்தோறும் சிறையில் அவரைப் பார்க்க 34 ஆண்டுகள் சென்ற பிறகு 2016 இல் காலமானார். அவரது தந்தை, இயற்பியல் பேராசிரியர் ஓய்வுபெற்ற கே வேதம், செப்டம்பர் 2009 இல் காலமானார்.

இப்போதைக்கு, வேதம் சிறையில் இருக்கிறார். ஒரு வகையில் சுதந்திரமாக இருந்தாலும் இன்னொரு வகையில் சிறையில் இருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த பிறகும், உண்மையான சுதந்திரத்திற்கான அவரது போராட்டம் இன்னும் தொடர்கிறது.

இந்தியாவில் பிறந்த ஒரு நபருக்கு, தனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்த நாட்டில் தங்குவதற்கு மீண்டும் ஒருமுறை போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, அதுவும் ஒரு தவறான தண்டனைக்குப் பிறகு என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top