Close
மார்ச் 7, 2026 1:24 மணி

கவிஞர் வாலி பிறந்தநாளில்..,

பாட்டுப்புலமை, இதர கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பழகும் பாங்கு, மொழியாளுமைத்திறன், தலைமுறை மாற்றத்திற்கேற்ப பாடல் புனைதிறனையும் சிறப்பாக மாற்றியமைத்துக் கொள்வது, எந்தவொரு சூழலிலும் ஆணவத்தொனியை வெளிப்படுத்தாத அடக்க உணர்வு, புதுக்கவிதையிலேயே ஆன்மீக காவியங்களை இயற்றியது உதாரணத்திற்கு அவதார புருஷன், பாண்டவர் பூமி, இராமானுஜ காவியம்.

பாடலிலேயே கதையையும் கூறிவிடும் சாமர்த்தியம், எத்தகைய இசைவடிவ மெட்டுக்கும் பாடல்புனையும் திறம், எனப் பல்வேறு வகைகளிலும் வாலிக்கு நிகர் வாலி தான். திரைப்பாடல்களைப் பொறுத்தவரை, வாலி, கண்ணதாசனுக்கு சரிநிகர் போட்டியாளராகத் திகழ்ந்தார் என்பது, மறுக்கமுடியாத உண்மை. இதை கவியரசர் கண்ணதாசனே, தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பல சமயங்களில், தனது திரைப்பாடலுக்கும், வாலி திரைப்பாடலுக்கும் வித்தியாசமே தெரியாமலிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கவிதைகளைப் பொறுத்தவரை, கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே. வாலியால், அவரை மிஞ்சவோ, அவருக்கு நிகராகவோ முடியவில்லை. ஒரு சில மரபுக்கவிதை நூல்களே எழுதியுள்ள வாலி, பிறகு புதுக்கவிதைக்கு மாறி, தனது பெரும்பாலான கவிதை நூல்களை, புதுக்கவிதை நூல்களாகவே எழுதினார்.

வாலி எழுதிய மரபுக்கவிதை நூல்கள், நன்றாக உள்ளது என்றாலும், கண்ணதாசனின் மரபுக்கவிதை நூல்களைப் போல, பல்வேறு வகையான சந்தங்களில், யாப்புவகைகளில் எழுதுதல், பாமரரையும் ஈர்க்கும் விதமாக, எளிய, இனிய சொற்களில், தத்துவார்த்தச் செறிவும் கலந்து எழுதுதல், வித்தியாசமான பாடுபொருள் தலைப்புகள், உள்ளிட்ட பல்வேறு வகையான கவிதை நுட்பச் செறிவுகள் அவற்றில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதைகளில் வாலி, தனித்துவமான தன்னிகரற்ற ஆளுமை செலுத்தினார் என்பதை மறுப்பதற்கில்லை.

இங்கிலாந்திலிருந்து சங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top