Close
மார்ச் 7, 2026 1:24 மணி

பாரதியை யானை தாக்கியது பற்றி பாரதியார் மகள் சகுந்தலா

பாரதியார் நினைவு நாளில் அவரது மகள் சகுந்தலா எழுதிய “என் தந்தை பாரதி” என்ற நூலில், பாரதியை யானை தாக்கியது பற்றி அவரது நூலில் கீழ் கண்டவாறு விவரிக்கிறார்

“ஒரு நாள் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று நாட்களாக அவர் கோவிலுக்குப் போகாததால் யானையின் நிலைமையைப்பற்றிப் பாரதி அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல வாழைப்பழத்தை யானையின் அருகில் சென்று கொடுத்தார், துதிக்கையை நீட்டி பழத்தை வாங்கிய யானை அவரை துதிக்கையால் கீழே வீழ்த்தி விட்டது, யானையின் நான்கு கால்களுக்கு இடையே வீழ்த்து விட்டார், கீழே பாறாங்கல் தரை, என் தந்தை எழுந்திருக்கவில்லை, முகத்தில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது.

யானை கால்களை ஒருமுறை அசைத்திருக்குமானால் அத்துடன் பாரதியார் கதை முடிந்திருக்கும், சுற்றி நின்றிருந்த ஜனங்கள் திகைத்து விட்டார்கள். உள்ளே நுழைந்து அவரை தூக்க ஒருவருக்கும் தைரியம் இல்லை.

அந்த வேளையில் எங்கு இருந்தோ வந்தான் குவளைக் கிருஷ்ணன். தன் உயிரை திரணமாக மதித்து உள்ளே குதித்து என் தந்தையை தூக்கி கொண்டு வந்தான், பின்னர் கேட்க வேண்டுமா? ஜனங்கள் அவரை தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்திற்கு கொண்டு வந்தார்கள்

மண்டபத்துக்கு எதிர்வீட்டிலிருந்த ஸ்ரீனிவாசாச்சசரியாருக்கு விஷயம் எட்டியது. அவர் ஓடி வந்து ஒரு வண்டியில் படுக்க வைத்து இராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கக் கூடிய அளவுக்கு அபாயகரமாக இல்லாததால் அவரை அங்கிருந்து திருவல்லிக்கேணி வீட்டிற்குக் கொண்டுவந்தார்கள்.
(திருமதி சகுந்தலா பாரதி என் தந்தை பாரதி பக்கம் 132-137)

இந்த சம்பவம் சரியாக எப்போது நடந்தது என்று விவரிக்கப்படவில்லை. இந்த கோயில் யானை நிகழ்வுக்கு பின் சில மாதங்கள் பாரதி உயிருடன் இருந்திருக்கிறார் என தெரிகிறது.

ரா.கனகலிங்கமும் கோயில் யானை என்ற கட்டுரையை பாரதி எழுதியதாக கூறியுள்ளார். கோயில்யானை கதையில் வஜ்ரி என்பவன் யானைக்கு மதம் பிடித்தது தெரியாமல் பழத்தை கொடுத்ததாகவும் யானை அவனை தாக்கியதாகவும் ரத்தகாயம் பட்டதாகவும், அவன் நண்பன் சந்திரவர்மன் காப்பாற்றியதாக தன் கதையை சற்று கற்பனையுடன் பாரதி எழுதி உள்ளார்.

08-01-1921ல் வெளி வந்த சுதேசமித்திரன் தலையங்கத்தில் பாரதி எழுதிய கோவில் யானை கதை முன்பே வந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை வைத்து பார்க்கும்போது யானை தாக்கிய சம்பவம் 1920 டிசம்பரில் நடந்து இருக்க வேண்டும். அதன்பின் 8 மாதங்கள் கழித்து ஈரோட்டில் ஒரு வாசக சாலை ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசி இருக்கிறார், அதன் தலைப்பு “மனிதனுக்கு மரணமில்லை” மறுநாள் இன்னொரு கூட்டத்தில் “இந்தியாவின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார், இதைப் பற்றி “எனது ஈரோடு யாத்திரை” என்ற கட்டுரை எழுதினார். இது ஆகஸ்ட் 4 ம் தேதி சுதேசமித்திரனில் வெளியானது.

அதன் பின் ஆகஸ்ட் மாத கடைசியில் கடும் வயிற்று போக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். பின்னர் ரத்த கடுப்பாக மாறி விட்டது. சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது. சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என அறியமுடிகிறது.

தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?

👆இங்கிலாந்திலிருந்து சங்கர்✍️

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top