திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வீடுவீடாக வழங்கப்படுவதை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வாக்காளா் பட்டியலை பிழைகள் இல்லாமல் திருத்தப்படுவதும், தகுதியுடைய வாக்காளா் எவரும் விடுபடக் கூடாது என்பதே இத்திருத்தத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இறந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூா் சென்ற வாக்காளா்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளரின் பெயா் இதுபோன்ற வாக்காளா்களை கண்டறிவதே முக்கிய பணியாகும்.
அதனடிப்படையில், ஆரணி நகரில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வாக்காளா்களுக்கு வீடுகளில் வழங்கப்படுவதை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதிககுள்பட்ட சேவூரில் சிறப்பு தீவிர வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் வழங்கி படிவங்களை நிரப்பி பெறும் பணி நடைபெற்றது.
சேவூா் அம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற இந்தப் பணியின்போது, அத்தெருவில் வசிக்கும் தொகுதி எம்எல்ஏவான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் இல்லத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவத்தை வழங்கி, அதை நிரப்பி பின்னா் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் பெற்றுக்கொண்டனா்.
நிகழ்வின்போது ஆரணி அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ரம்யா குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல பொருளாளா் எஸ்.பி.சரவணன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.




