டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களிள் உடைமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் நுழைவாயில் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
அங்கு கோபுர நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்கள் கொண்டு வந்த பைகளை திறந்து பார்த்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆயத்தப் பணிகள் தீவிரம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது.
திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் நாள், டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணியளவில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கோயிலை தூய்மைப்படுத்தும் உழவாரப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷனைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் சன்னதி கொடிமரம், பலிபீடம், சரவிளக்குகள், கொத்து விளக்குகள், அகண்ட விளக்கு, நந்தவனம், ஆயிரங்கால் மண்டபம், மடப்பள்ளி மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.





