மணிப்பூரின் காடுகளில் இருந்து புறப்பட்ட சாட்டிலைட் டேக் பொருத்தப்பட்ட மூன்று அமூர் வல்லூறுகள் பறவை உலகில் மிகவும் வியக்க வைக்கும் ஒரு வலசைப் பயணத்தை நிறைவு செய்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளன. ஒரு வாரத்திற்குள், அவை பல ஆயிரம் கிலோமீட்டர்கள் கண்டங்களைக் கடந்து பறந்துள்ளன.
பறவை உலகின் பெருந்தூரச் சிறிய பயணி
150 கிராம் மட்டுமே எடையுள்ள இந்தப் பறவைகள், அவற்றின் அபாரமான சகிப்புத்தன்மையால் விஞ்ஞானிகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளன. இந்தப் பயணத்தில் ‘அபபாங்’, ‘அலாங்’, மற்றும் ‘அஹு’ என்ற பெயரிடப்பட்ட மூன்று வல்லூறுகளின் சாகசமே இப்போது பேசப்படுகிறது.
இந்தச் சாதனையை நிகழ்த்தியதில் முதன்மையானது ஆரஞ்சு நிறக் குறியிடப்பட்ட ‘அபபாங்’ ஆகும்.
வடகிழக்கு இந்தியாவிலிருந்து புறப்பட்ட இது, 6 நாட்கள் மற்றும் 8 மணி நேரத்தில் எந்த ஓய்வும் இன்றி, இடைநில்லாமல் 6,100 கிலோமீட்டர்கள் தூரம் பறந்து கென்யாவை அடைந்தது. இந்தியா, அரபிக்கடல் மற்றும் ஆப்பிரிக்காவின் முனைப் பகுதிகளைக் கடந்து இந்தப் பயணம் நிகழ்ந்துள்ளது.
வெறும் 150 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பறவை இடைவிடாமல் மேற்கொண்ட மிக நீண்ட பயணங்களில் இதுவும் ஒன்றாகும்.
மஞ்சள் குறியிடப்பட்ட இளைய பறவையான ‘அலாங்’, 6 நாட்கள் மற்றும் 14 மணி நேரத்தில் 5,600 கி.மீ தூரம் பறந்தது. இது தெலங்கானாவில் ஒரு இரவுத் தங்குதலும், மகாராஷ்டிராவில் ஒரு சிறிய ஓய்வும் எடுத்துக்கொண்ட பிறகு, நீண்ட கடற் பயணத்தைத் தொடங்கி கென்யாவுக்குச் சென்றது.
சிவப்பு குறியிடப்பட்ட ‘அஹு’ என்ற வல்லூறு சற்று வடக்குப் பாதையைத் தேர்ந்தெடுத்தது. இது வங்கதேசத்தின் மேற்குப் பகுதியில் ஓய்வெடுத்த பிறகு அரபிக்கடலைக் கடந்து, 5 நாட்கள் மற்றும் 14 மணி நேரத்தில் 5,100 கி.மீ தூரம் பயணித்தது. இது தற்போது சோமாலியாவின் வடக்கு முனையில் இருந்தாலும், விரைவில் கென்யாவின் ‘சா வோ’ தேசிய பூங்காவில் உள்ள தனது சகாக்களுடன் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நம்ப முடியாத வலசைப் பயணங்கள், அமூர் வல்லூறுகளை “பெருந்தூரச் சிறிய பயணி” என்று செல்லமாக அழைக்கப்படுவதை நிரூபிக்கின்றன. கண்டங்களை இணைக்கும் அவற்றின் வலசைப் பாதைகளைப் பாதுகாக்க வேண்டியதன் உலகளாவிய முக்கியத்துவத்தை இந்தச் சாதனைகள் உறுதிப்படுத்துகின்றன.

