Close
மார்ச் 7, 2026 2:33 மணி

மோட்டார் வாகன எப்.சி. கட்டணம் பலமடங்கு உயர்வை ரத்து செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

செல்ல ராஜாமாணி, தலைவர், தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன்.

மத்திய அரசு மோட்டார் வாகனங்களுக்கு கடுமையாக உயர்த்தியுள்ள பல மடங்கு எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்ய, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் மாநிலத்தலைவர் செல்ல ராஜாமணி, தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் டிரான்ஸ்போர்ட் கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் டூ வீலர் முதல் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரை அனைத்திற்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் (எப்சி) கட்டணத்தை கடந்த 11ம் தேதி முதல் பல மடங்கு உயர்த்தி, அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

புதிய உத்தரவின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள டூ வீலர்களுக்கு எப்சி சான்றிதழ் பெற தற்போதுள்ள ரூ.600 கட்டணத்தை ரூ. ஆயிரமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள டூ வீலர்களுக்கு ரூ. 600ஆக உள்ளதை ரூ. 2000 ஆக உயர்த்தியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள 3 சக்கர வாகனங்களுக்கு எப்சி பெற தற்போது, 600 ஆக உள்ளதை 15 முதல் 20 ஆண்டு வரை தற்போது ரூ. 3000 ஆக உயர்த்தியும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள 3 சக்கர வாகனங்களுக்கு ரூ. 7,000 ஆக உயர்த்தியுள்ளது.

நடுத்தர சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் (வேன்கள்) தற்போதைய எப்.சி கட்டணம் ரூ. 1800 ஐ 15-20 ஆண்டுகள் வரை ரூ. 10,000 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ. 20,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.

கார் உள்ளிட்ட எல்சிவி வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவற்றிற்கு ரூ. 1,000 ஆக இருந்ததை தற்போது ரூ. 5,000ஆக உயர்த்தியும், 20 ஆண்டுகளுக்கு மேல் ரூ. 15,000 ஆக உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள், பஸ்கள் மற்றும் அனைத்து கனரக வாகனங்களுக்கும் ரூ. 2,500 ஆக இருந்ததை 15-20ஆண்டுகள் வரை ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25,000 என 10 மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது.

இந்த எப்சி கட்டண உயர்வால், லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள், குறிப்பாக ஓரிரண்டு பழைய லாரிகளை வைத்து தொழில் செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

2020-ல் கொரோனா பரவலுக்கு பிறகு லாரித் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கி நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள எப்.சி கட்டண உயர்வை கடந்த 17ம் தேதி முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

அழிந்து வரும் போக்குவரத்து தொழிலைப் பாதுகாத்திடவும், பல லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கோடிக்கணக்கான டூ வீலர், எல்சிவி, வேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மத்திய அரசு அறிவித்துள்ள எப்.சி சான்றிதழ் கட்டண உயர்வை தமிழகத்தில் அமல்படுத்தாமல், மத்திய அரசிடம் பேசி, புதிய எப்சி கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top