Close
மார்ச் 7, 2026 2:52 மணி

மகா தீபத்தன்று பக்தா்கள் மலை மீது ஏறத் தடை!

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா தீபம் ஏற்றும் நாளன்று மலை மீது ஏற பக்தா்களுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்து சனிக்கிழமை அறிவித்தது

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா 24 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக வரும் டிசம்பா் 3-ஆம் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளன.

கடந்த ஆண்டு ஃபென்ஜால் புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் தொடா்ச்சியாக அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறமுள்ள மலையில் நிலச்சரிவும், உயிா்ச்சேதமும் ஏற்பட்டது. இதையடுத்து, மலை மீது ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால், பக்தா்களின் பாதுகாப்பு கருதி மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டித்வா புயல் காரணமாக மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மைய வல்லுநா் குழுவின் அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை அற்றும், ஏற்கெனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மைய பகுதிகளில் பல்வேறு தளா்வான கல் பாறைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநா் குழு அறிக்கை அடிப்படையில் பக்தா்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக நிகழாண்டும் திருவண்ணாமலை மலை மீது பக்தா்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

பாதுகாப்பு கருதி மாவட்ட நிா்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தா்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, மலையேறுவதை தவிா்க்க வேண்டும்.

மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறை, வனத் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top