ஆந்திர மாநிலம் தடா-ஐயப்பன் நகர் எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவிலுக்கு 15-ம் ஆண்டாக பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், தமிழக எல்லை ஆரம்பாக்கம் ஒட்டி உள்ள தடா, ஐயப்பன் நகரில் பிரசித்தி பெற்ற எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவில் உள்ளது.
இத்திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு காப்பு கட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், தடா எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் உள்ள எல்லை மாரி துலுக்கானத்தம்மன் கோவில் வரை பேண்ட்-வாத்தியம் முழங்க தலையில் பால்குடங்களை சுமந்த வண்ணம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
இதன் பின்னர், வானவேடிக்கையுடன் மூலவருக்கு அந்த பாலை அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசன திரவியங்கள் மூலம் மகா அபிஷேகம் செய்தனர். பின்னர், பட்டாடையில் மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதன் பின்னர், விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் நளினிமாயா தலைமையில் திருக்கோவிலின் தர்மகர்த்தா ராஜகோபால்சாமி, குருசாமி தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் பக்தர்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் சீனிவாசன்.




