திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜோதீஷ்(26) என்பவரின் மனைவி புவனேஸ்வரி(21) என்பவர் கர்ப்பமான நிலையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
9 மாத கர்ப்பமான நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில், மூளை வளர்ச்சி இல்லாமல் பலவீனமாக குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. ஸ்கேன் ரிப்போட்டில் இது குறித்து தெரிந்தும், கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவ மனை நிர்வாகம் மறைத்ததாக கூறி, மாவட்ட மருத்துவதுறையிடம் புகாரளித்தனர்.
கடந்த மாதம் 19-ஆம் தேதி ஆய்வு செய்த அதிகாரிகள் மருந்து கடைக்கு மட்டும் சீல் வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குழந்தையின் உறவினர்கள் குழந்தையின் சடலத்தை ஒரு கட்டை பையில் எடுத்து வந்து கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனை முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சிளம் குழந்தையின் உடலை மீட்ட கும்மிடிப்பூண்டி போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், அந்த கர்ப்பிணிக்கு ஸ்கேன் பரிசோதனையின் அடிப்படையில் உரிய சிகிச்சை அளிக்க தவறியதாகவும், உடல் குறைபாட்டுடன் பிறந்து குழந்தை இறந்தது, சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் பராமரிக்கப்படாததால் மருத்துவ மனையில் சட்டம் ஒழுங்கு ஏற்படும் சூழல் உள்ளதாகவும், நோயாளிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் உத்தரவின்பேரில் மருத்துவ குழு அந்த மருத்துவ மனைக்கு சீல் வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் செய்தியாளர். சீனிவாசன்.




