Close
மார்ச் 7, 2026 4:23 மணி

மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வாசலிலே கோலத்தில் நடுவே பூசணிப்பூ

திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர்

பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்குவது அண்ணாமலையார் கோயில்.

நேற்று மார்கழி முதல் நாள் என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. அதிகாலை முதலே  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து காவல்துறையினர் கோவிலில் தடுப்புகளை அமைத்து பக்தர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்பினர்.

மேலும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கிரிவலப் பாதையில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயில்,  ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், ரமணாஸ்ரமம், அஷ்ட லிங்கங்கள் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

மார்கழி முதல் நாள் வண்ண கோலமிட்டு, பூசணிப்பூ வைத்து வரவேற்ற பெண்கள்!

தமிழ் மாதங்களில், மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீட்டு வாசலில் பச்சரிசி மற்றும் வண்ணப் பொடிகளால் கோலம் போட்டு, அதன் நடுவில் சாணத்தால் பிள்ளையார் செய்த வைத்து, அதில் மஞ்சள் நிறமான பூசணிப்பூவை வைப்பது தமிழர்களின் வழக்கம்.

அதை வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதம் முதல் தை மாதம் பொங்கல் முடியும் வரை இவற்றை செய்து வருகின்றனர்.

இந்த பழமையான வழக்கம் இன்றளவும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து பல இல்லங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக கிராமங்களில் மட்டுமல்லாமல் திருவண்ணாமலை நகரத்தில் வீடுகளின் முன்பும் அழகான வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்து அழகுபடுத்தி இருந்தனர்.

இங்க அழகான வண்ணக் கோலங்களை அதில் வைக்கப்பட்டுள்ள பூசணிப்பூ மற்றும் செம்பருத்தி பூ ஆகியவற்றினை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் திருவண்ணாமலை அருகில் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல கிராமங்களில்  வீடுதோறும் வாசலில் தண்ணீர் தெளித்து, வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்து, விளக்கேற்றி அழகுபடுத்துவதில் பெண்கள் ஆர்வம் காட்டினர்

மார்கழியில் காலையில் எழுவதன் மூலமாக சுத்தமான ஆக்சிஜன் சுவாசக் காற்று, உடல் ஆரோக்கியம் மற்றும் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.

மேலும், முன்னோர்கள் தங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாக மார்கழி மாதங்களில் அழகிய கோலமிட்டு அந்த கோலத்தின் மீது பூசணிப்பூ அல்லது செம்பருத்தி, பரங்கிப் பூக்களை வைத்து அழகுப்படுத்தும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே உள்ளது.

நம் வீட்டில் பூக்கும் எந்த பூ கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது செம்பருத்திப்பூக்களை அதிகம் வைக்கின்றனர். பூசணிப்பூ வைத்து கோலமிட்ட வாசலை பார்த்தாலே போதும், “வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா…. என்று இளைஞர்களின் மனது பாடத் தொடங்கி விடும்.

இப்பழக்கம் பாண்டவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது. அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top