திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் பிராயசித்த அபிஷேகம் என்பது, தீபத் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகள் முடிந்த பிறகு, மலை ஏறியதற்கான பரிகாரமாக செய்யப்படும் சிறப்பு பூஜை ஆகும்.
இதில், கோயிலில் யாகம் நடத்தப்பட்டு, புனித நீர் கலசத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்தில் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 3-ஆம் தேதி அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் அருகே ஆனந்த நடனம் ஆடினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் கோஷத்தை எழுப்பினர்
அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலை சுயம்பு வடிவான இறைவனின் திருமேனியாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வருவதால் தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயசித்த பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை புதன் கிழமை நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில் அண்ணாமலையார் திருக்கோயில் பிச்சகர்கள் ரகுராமன், விஜயகுமார், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.




