வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்தப் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை முன்வைத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்தாண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து, அவர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார்.
அப்போது போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் இயக்கத்தின் தலைவராக ஷெரீஃப் உஸ்மான் ஹாடி இருந்தார்.
இந்த நிலையில், வங்கதேச பொதுத் தேர்தலையொட்டி, டாக்காவில் தனது பிரசாரத்தை ஹாடி தொடங்கினார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடி நேற்று உயிரிழந்தார்.
ஷெரீப் உஸ்மான் ஹாடியின் படுகொலைக்கு இந்தியாவே காரணம் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியுள்ளது.
வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான ‘புரோதம் ஆலோ’ அலுவலகம் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. பல ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
சிட்டகாங்கில் உள்ள இந்திய உதவி உயர் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ராஜ்ஷாஹி மற்றும் குல்னா ஆகிய நகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேச இடைக்கால அரசாங்கத்திடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையால் இந்தியர்களுக்கு அவசரப் பயண ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால், முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான ராஜதந்திர உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.




