இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு தீவிர திருத்தங்கள் படிவங்கள் மூலம் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் நிலை குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 14, 01,198 வாக்காளர்கள் இருந்த நிலையில் திருத்தத்திற்கு பின் தற்போது 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 வாக்காளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு, இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு, கண்டறிய முடியாதவர்கள் மற்றவை என மொத்தம் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 144 வாக்கு சாவடிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 1545 வாக்குகள் சாவடிகள் செயல்படும் எனவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,32,059 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 54,718 வாக்காளர்களும் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 37,515 வாக்காளர்களும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 49982 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்கு சாவடிகளை சீரமைப்பின் பணிகளுக்குப் பின் ஸ்ரீதிப் பெரும்பத்தூர் தொகுதியில் 60 வாக்கு சாவடிகளும் உத்தரமேரூரில் 54 வாக்கு சாவடிகளும் ஆலந்தூரில் 35 வாக்கு சாவடிகளும் காஞ்சிபுரத்தில் 36 வாக்கு சாவடிகளும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு பின் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் பட்டியல்கள் குறித்த தகவல்கள் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சார் ஆட்சியர் ஆஷிக் அலி , ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட தேர்தல் துறை அலுவலர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




