திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், எதிலும் வல்லவர் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ,திராவிட மாடல் அரசு 2.0 அமைவது உறுதி என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வரவேற்புரையாற்றினார்.
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.631 கோடியே 48 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.63 கோடியே 74 ஆயிரம் மதிப்பில் 46 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1400 கோடியே 57 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாவது,
திருவண்ணாமலை என்றாலே ஜவ்வாதுமலை எழில் கொஞ்சும் அழகை ரசிப்பதா, இங்கு கூடியிருப்பவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியை ரசிப்பதா என்று தெரியாமல் உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன்.
ஆன்மீகத்தில் ஒளி வீசி ஆன்மீக அன்பர்களை இழுக்கின்றதும் இந்த திருவண்ணாமலை. கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடங்கள், தொல்லியில் முத்திரை பதிப்பு, வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கின்றது.
மேலும் ஆரணி அரிசி, ஆரணி பட்டு, படவேடு வாழை முடையூர் சிற்பங்கள் என ஏராளமான பெருமைகள் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் கொடுத்தது இந்த திருவண்ணாமலை மண்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 14ம் தேதி திருவண்ணாமலைக்கு வருகை தந்து இதே இடத்தில் திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றேன். மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
எதிலும் வல்லவர் மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள். காலத்தால் அழியாத புகழை அரசுக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக எனக்கு ஒரு புத்தகமே கொடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1762 பள்ளிகளில் 80 ஆயிரத்து 859 குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தில் பலனடைகிறார்கள். 21,423 மாணவிகள், 19,326 மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் நான் முதல் திட்டத்தில் பயன் பெறுகிறார்கள். 46 ஆயிரத்து 793 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உள்ளோம்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஊக்குவிக்க சேத்துப்பட்டு வட்டம் ஏந்தல் கிராமத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 37 ஏக்கரில் புது சிப்கோ தொழில் பேட்டை அமைக்கப்படும்,
செங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
வேளாண் சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்
கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்க ம் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகளுக்காக ரூ 5 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்யப்படும் என்றார்.
திருவண்ணாமலையில், திருக்கோவிலூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் – 2025” விழாவில் கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




