கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.
வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.
14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.
பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத பௌர்ணமி ஜனவரி 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணியளவில் துவங்கி, ஜனவரி 3ஆம் தேதி தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
மார்கழி பௌர்ணமியின் சிறப்புகள்
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு பெளர்ணமியும் ஒரு குறிப்பிட்ட தனி சிறப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி மிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளன.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வழக்கம். நடராஜரை வழிபடும் நாளாகவும், பெண்கள் தங்கள் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டும் என விரதம் இருக்கும் உன்னதமான நாள். திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து நடராஜர், அம்பாளை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மார்கழி பெளர்ணமி விரத வழிபாடு செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண பலன்கள் பெறலாம். உங்களின் கஷ்டங்கள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். நோய்கள், குறைபாடுகள் நீங்கும். எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.




