விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களின் அடுத்த இலக்கு செவ்வாய் கிரகம். ஆனால், பூமியில் இருந்து கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இந்த சிவப்பு கிரகத்திற்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும். இந்த சவால்களை எதிர்கொள்ள, தற்போது விண்வெளியில் உள்ள ரோபோட்டிக் விண்கலங்கள் மற்றும் ரோவர் வாகனங்களை விஞ்ஞானிகள் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
விண்வெளி ஆராய்ச்சி என்பது இனி “ரோபோக்களா அல்லது மனிதர்களா?” என்ற விவாதம் அல்ல; அது “ரோபோக்களும் மற்றும் மனிதர்களும் இணைந்து எப்படிச் சாதிக்கப் போகிறார்கள்?” என்பதாக மாறிவிட்டது.
அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் (AGU) சமீபத்திய கூட்டத்தில் விஞ்ஞானிகள் விவரித்தபடி, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கு முன்னால், அங்குள்ள சூழலைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள ரோபோக்கள் ஒரு ‘முன்னோடியாக’ செயல்படுகின்றன. செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், அங்கு அவர்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்யவும் தற்போதைய ரோபோடிக் பயணங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன.
விண்வெளி வானிலை மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு
செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் மனிதர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் ‘விண்வெளி வானிலை’. சூரியனிலிருந்து வெளியேறும் அபாயகரமான கதிர்வீச்சுகள் மனித ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை.
இதை எதிர்கொள்ள நாசாவின் மெவன் விண்கலம் மற்றும் கியூரியாசிட்டி , பெர்செவரன்ஸ் ரோபோக்கள் சேகரித்த தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
நாசாவின் MAVEN (Mars Atmosphere and Volatile EvolutioN) விண்கலம் கடந்த 11 ஆண்டுகளாக செவ்வாயின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து வருகிறது. 2014 முதல் 2025 வரையிலான முழு சூரியச் சுழற்சியையும் இது கண்காணித்துள்ளது. இதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு, செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையிலும் அதன் மேற்பரப்பிலும் எந்தெந்த காலங்களில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர்.
இதற்காக ஒரு புதிய ‘டெசிஷன் சப்போர்ட் டூல்’ உருவாக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி வானிலை மற்றும் கதிர்வீச்சு அளவை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும். இது எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் எப்போது வெளியே செல்லலாம், எப்போது பாதுகாப்பு கவசங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும் ஒரு ‘வானிலை முன்னறிவிப்பு’ பலகையாக செயல்படும்.
செவ்வாய் அல்லது நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு நீர் மிக அவசியம். நிலவின் தென் துருவத்தில் நீர் இருப்பதாகத் தெரிந்தாலும், அது துல்லியமாக எங்குள்ளது என்பதில் இன்னும் தெளிவில்லை. இதைக் கண்டறிய நாசா புதிய இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர்களை உருவாக்கி வருகிறது. இவை விண்வெளி வீரர்களுக்கு தாதுக்கள் மற்றும் நீரைத் தேட உதவும்.
அதேபோல், செவ்வாய் கிரகத்தின் ஆழமான பகுதிகளில் உறைந்துள்ள பனிக்கட்டிகளைக் கண்டறிவதும் ரோபோக்களின் முக்கியப் பணியாகும். குடிநீருக்கும், ராக்கெட் எரிபொருளுக்கும் இந்த நீர் ஆதாரங்கள் மிக அவசியம். பெர்செவரன்ஸ் ரோவரில் உள்ள MOXIE என்ற கருவி, செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றிக் காட்டியுள்ளது. இது ஒரு சிறு பரிசோதனை முயற்சி என்றாலும், எதிர்காலத்தில் பெரிய அளவிலான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அங்கு அமைக்க இதுவே அடிப்படை.
செவ்வாய் மண்ணின் சவால்கள்: தூசியும் காந்தப்புலமும்
செவ்வாயின் தூசி மிகவும் நுணுக்கமானது மற்றும் அரிப்புத் தன்மை கொண்டது. இது விண்வெளி வீரர்களின் உடைகள் மற்றும் இயந்திரங்களைப் பாதிக்கக்கூடும். அப்பல்லோ பயணங்களின் போதே விண்வெளித் தூசியானது விண்வெளி வீரர்களின் உடைகள் மற்றும் கருவிகளைப் பாதித்தது.
இதனை எதிர்கொள்ள, நிலவின் தென் துருவத்தில் நாசா மேற்கொள்ளும் ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் அனுபவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிலவில் தூசியைச் சமாளிக்க உருவாக்கப்படும் Compact Electrostatic Dust Analyzer (CEDA) போன்ற கருவிகள், செவ்வாய் பயணத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும்.
செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் உள்ள பாறைகளில் காந்தப்புலங்கள் புதைந்துள்ளன. இவை கதிர்வீச்சிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இயற்கையான பாதுகாப்பை வழங்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இன்ஜெனியூட்டி போன்ற சிறிய ட்ரோன்களைப் பயன்படுத்தி, செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் இத்தகைய பாதுகாப்பான இடங்களைக் கண்டறியத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாதிரி சேகரிப்பும் உயிரினத் தேடலும்
பெர்செவரன்ஸ் ரோவர் தற்போது செவ்வாயின் ‘ஜெசீரோ’ பகுதியில் பழங்கால உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைத் தேடி மண்ணை ஆய்வு செய்து வருகிறது. இந்த மண் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வருவதற்கான ‘Mars Sample Return’ திட்டம் ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி மற்றும் நாசாவால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் ஆய்வகங்களில் சோதிக்கப்படும்போது, செவ்வாயின் மண் மனிதர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பது தெரியவரும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவ ரோபோக்கள்
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 2026-ஆம் ஆண்டு வாக்கில் மனிதர்களுக்கு முன்பாக தனது ‘ஸ்டார்ஷிப் Starship’ விண்கலத்தில் மனித உருவ ரோபோக்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இவை மனிதர்களுக்குப் பாதுகாப்பான சூழலை அங்கே உருவாக்கி வைக்கும். சிக்கலான கட்டுமானப் பணிகள், ஆய்வக வேலைகள் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தான பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொள்ளும். “செயற்கை விண்வெளி வீரர்கள்” ன்று அழைக்கப்படும் இந்த ரோபோக்கள், மனித குலத்தின் வாரிசுகளைப் போல விண்வெளியில் செயல்படும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ரோபோக்கள் வெறும் இயந்திரங்கள் மட்டுமல்ல, அவை செவ்வாய் கிரகத்தை மனிதர்கள் வசிக்கக்கூடிய இடமாக மாற்றுவதற்கான ‘கண்களாகவும், கைகளாகவும்’ திகழ்கின்றன. வரும் 2030-களின் இறுதியில் அல்லது 2040-களில் மனிதன் செவ்வாயில் கால் பதிக்கும்போது, அதற்குப் பின்னால் பல ஆண்டுகால ரோபோக்களின் உழைப்பு இருக்கும் என்பது உறுதி.
மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான இந்த ஒருங்கிணைந்த பயணம், செவ்வாய் கிரகத்தை மனித இனத்தின் இரண்டாவது வீடாக மாற்றும் நாளை வெகுதூரத்தில் இல்லை என்று காட்டுகிறது.




