Close
மார்ச் 7, 2026 4:58 மணி

திருப்பதி – ராமேஸ்வரம் ரயிலுக்கு போளூரில் பொதுமக்கள் வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வழியாக இயக்கப்படும் திருப்பதி – ராமேஸ்வரம் ரயில் வெள்ளிக்கிழமை முதல் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது,

இதற்கு பொதுமக்கள் சாா்பிலும், பாஜக, அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பு சாா்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது.

திருப்பதி – ரமேஸ்வரம் விரைவு ரயில் (வண்டி எண் – 16779 – 16780) போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த ரயில் போளூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால், இந்தப் பகுதியில் வா்த்தகம் அதிகரிப்பதுடன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயனடைவா் என்பதால், இந்தக் கோரிக்கையை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்று ரயில் நின்று செல்ல உத்தரவிட்டாா்.

அதன்படி, போளூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு வந்து நின்ற திருப்பதி – ராமேஸ்வரம் ரயிலுக்கு தேசியக் கொடியை காட்டி, ரயிலுக்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து, பூமாலை அணிவித்து, பூசணிக்காய் உடைத்து மக்கள் வரவேற்பளித்தனா்.

நிகழ்ச்சியில் நுகா்வோா் விழிப்புணா்வு, உரிமைகளுக்காக போராடும் தேசிய அளவிலான அமைப்பான அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் மதுசூதனன், பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், ராணுவ பிரிவு மாவட்டத் தலைவா் பாண்டியன் மற்றும் ABGP அமைப்பு நிா்வாகிகள் சீனிவாசன் உள்ளிட்ட  பலர்  கலந்துகொண்டனா்.

பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை ஒரு முக்கியமான ஆன்மீக, சுற்றுலா மற்றும் வர்த்தக நகரமாக விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்நகருக்கு வருகை தருகின்றனர். இருப்பினும், திருவண்ணாமலைக்கு நேரடி நீண்ட தூர இரயில் சேவைகள் மிகவும் குறைவாக உள்ளன.

தற்போது இயங்கிவரும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பது மூலம் தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி, பாதுகாப்பான மற்றும் மலிவான போக்குவரத்து வசதி கிடைக்கும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவதுடன், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆன்மீக சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமாக அமையும்.

எனவே, திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள இந்த இரயில் நீட்டிப்பு விஷயத்தை மத்திய இரயில்வே அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க தங்களது ஆதரவும் முனைப்பும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

திருவண்ணாமலை மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தாங்கள் உறுதியாக துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,விரைவில் இரயில் இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் தாம்பரம் திருவண்ணாமலைக்கு பகல் நேரத்தில் ரயில் சேவை உடனடியாக தொடங்க வேண்டும் என அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top