Close
மார்ச் 7, 2026 1:56 மணி

600 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் திரும்பும் அரிய வகை வெள்ளை நாரைகள்

பிரிட்டிஷ் மண்ணில் சுமார் 600 ஆண்டுகளாக மறைந்துபோன ஒரு அரிய பூர்வீக பறவை இனம், தற்போது வரலாற்று ரீதியாக மீண்டும் லண்டனுக்குத் திரும்புகிறது. பிரிட்டிஷ் தீவுகளை பூர்வீகமாகக் கொண்ட வெள்ளை நாரைகள் 2026 அக்டோபரில் கிழக்கு லண்டனின் டேகன்ஹாமில் உள்ள ஈஸ்ட்புரூகெண்ட் கண்ட்ரி பூங்காவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

வாழ்விட இழப்பு மற்றும் வேட்டை காரணமாக 15-ஆம் நூற்றாண்டிலிருந்து தலைநகர் லண்டனில் இந்த இனம் காணாமல் போனது. தற்போது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு லண்டனில் இந்த நாரைகளை மீண்டும் இனப்பெருக்கம் செய்ய வைப்பதற்கான முதல் திட்டமாகும்.

இந்த நாரைகள் ஆரம்பத்தில் பூங்காவிற்குள் புல்வெளி மற்றும் ஈரநிலங்கள் நிறைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பெரிய பறவைக் கூடத்தில் வைக்கப்படும். அவை அந்தச் சூழலுக்குப் பழகி, அங்கேயே கூடு கட்டத் தொடங்கும் வரை அங்கேயே பராமரிக்கப்படும். அதன் பிறகே அவை சுதந்திரமாக பறக்க அனுமதிக்கப்படும்.

இந்தத் திட்டம் லண்டன் வனவிலங்கு அறக்கட்டளை, பார்கிங் மற்றும் டேகன்ஹாம் கவுன்சில் மற்றும் ‘ஒயிட் ஸ்டோர்க் திட்டம்’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாகியுள்ளது. இதற்கு லண்டன் மேயரின் ‘கிரீன் ரூட்ஸ்’ நிதியிலிருந்து ஒரு பகுதி நிதி வழங்கப்படுகிறது. லண்டன் சிட்டி ஹால் இணையதளத்தின்படி, நகரின் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ள 1.2 கோடி பவுண்ட் நிதியில், இந்தத் திட்டத்திற்காக மட்டும் 5 லட்சம் பவுண்ட் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மேற்கு சசெக்ஸில் உள்ள நெப் எஸ்டேட் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2016-ல் தொடங்கப்பட்ட முயற்சியால், 2020-ல் முதல் முறையாகக் காட்டுப் பகுதியில் நாரைக் குஞ்சுகள் பிறந்தன. 2025ம் ஆண்டிற்கான தரவுகளின்படி, அங்கு 45-க்கும் மேற்பட்ட கூடுகள் வெற்றிகரமாக உருவாகியுள்ளன.

நெப்பில் உள்ள சில நாரைகளுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அவை ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கு இடம்பெயர்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள நாரைகள் பெரும்பாலும் கட்டிடங்களின் கூரைகள் அல்லது செயற்கை மேடைகளில் கூடு கட்டுவதை விரும்புகின்றன.

இந்த ரீவைல்டிங் திட்டத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 2027-ல் இதே பூங்காவில் யூரேசிய நீர்நாய்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை அணைகளைக் கட்டி ஈரநில சூழலை உருவாக்குவதன் மூலம், மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்கிங் மற்றும் டேகன்ஹாம் கவுன்சில் தலைவர் டொமினிக் ட்வோமி கூறுகையில், இந்தத் திட்டம் மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இயற்கையைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பள்ளி மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு சிறந்த கல்வி வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்

பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இத்திட்டத்திற்காக ஒரு பிரத்யேக ‘நாரை அதிகாரி’ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாரைகளின் கூடுகளைக் கண்காணிப்பதோடு, பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்.

சிறைபிடிக்கப்பட்ட நிலையில் வளர்க்கப்படும் இந்த நாரைகள், காடுகளில் உள்ள நாரைகளுடன் எவ்வாறு பழகுகின்றன மற்றும் அவற்றின் இடம்பெயர்வு பழக்கவழக்கங்கள் எப்படி அமைகின்றன என்பது குறித்து நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top