Close
மார்ச் 7, 2026 11:37 காலை

மக்கள் தலைவர் பிறந்த நாளில் மனதில் உதிர்த்தவை

புரட்சி தலைவர் ஒரு படத்தில் சாட்டையை கையில் எடுப்பார். அநியாயம் செய்பவர்களை தட்டி கேட்டு, கயவர்களை வெளுத்து வாங்குவார்.

பச்சாதாபத்தை பெறுவதற்காக, வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் தெருவோரங்களில் சாட்டையடித்து கொள்வார்கள். அது ஒரு வகையிலான யாசகம். போராட்டம் என்கிற வரையறைக்குள் வராது. அவர்கள் பொதுவெளியில் செய்வதற்கான எந்த பொது நல நோக்கமுமில்லை.

தன்னை தானே வருத்திக்கொள்வதற்கு பல உளவியல் காரணங்கள் இருக்கின்றன. சுயவேதனை கொடுத்து கொள்ளும்படியான உண்ணாவிரதமும், தீக்குளித்தலும் ஒரு போராட்ட வடிவம் தான். அவற்றை நாம் கொச்சைப்படுத்த வேண்டியதில்லை.

போராட்டத்தால் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. போராட்டத்தால் தான் நமக்கு பல உரிமைகள் கிடைத்தது. போராட்டத்தை எந்த ஆளும் கட்சியும் விரும்புவதில்லை. எதிர்கட்சியும் தம்மை நிலைநிறுத்தி கொள்ள போராட தான் வேண்டி இருக்கிறது.

போராடுவது தவறு என்கிற முடிவுக்கு நாம் வரவில்லை. போராடும் சூழ்நிலையை உருவாகியிருப்பது எவ்வளவு தவறு என்பது தான் இங்கு கேள்வி.

போராடாமல் கிடைக்கும் வெற்றியோ சந்தோசமோ ருசிப்பதில்லை. போராடி பாருங்கள் சிலநேரம் உங்களை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். சகித்துக் கொள்வது எல்லாம், சுகபோகம் கெடாதவரை தான். சுகபோகம் கெட்டுவிட்டாலோ, போராட்ட சிந்தனை கிளைக்கும். போராட கூட்டம் கூடும். இந்த கூட்டம் இன்னும் கூட்டம் சேர்க்கும். இந்த கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றினால், இன்னொரு வகை கூட்டம் இதை எதிர்த்து உருவாகும்.இது தான் அரசியல் நியதி.

தற்கால அரசியலில் எந்த தலைவனும் தீக்குளிக்க முன் வருவதில்லை. எந்த தலைவனும் ஆடம்பர ஆடைகளை துறப்பதில்லை, சாகும்வரை உண்ணாவிரம் இருப்பதில்லை, நடைப்பயணத்தை முழுவதுமாக நடந்து முடிப்பதில்லை..,

அரசியலில் அவதாரம் எடுப்பவர்கள் அரிதாரத்துடன் வருகிறார்கள். விலைபோகாத போராளிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top