Close
மார்ச் 7, 2026 4:22 மணி

திருவண்ணாமலை பாண்டீஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் மண்டகப்படி விழா

பாண்டீஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார்

பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து வழிபட்ட, சனி பாதிப்புகளை நீங்க செய்யும் கோவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பாண்டவர் தீர்த்த கோவில் ஆகும்.

திருவண்ணாமலை ஸ்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன. கோவில்களைக்கட்டும் போதே அருகில் குளம் ஒன்றை வெட்டும் பழக்கத்தை நமது மூதாதையர்கள் வைத்திருந்தனர்.

தொலை தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அந்த குளத்தில் குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வழிபாடு செய்ய உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கோவில் அருகிலேயே திருக்குளங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆலயங்கள் அருகில் மகிமை மிக்க தீர்த்தங்கள் இருப்பது நமது சாஸ்திரங்கள், புராணங்கள் மூலம் தெரிய வந்தது. முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் இந்த தீர்த்தங்களை உருவாக்கி, அதில் நீராடி, வழிபட்டு உரிய பலன்களைப் பெற்று இருப்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மலை மீதும் மற்றும் நகரைச் சுற்றி நாலாபுறமும் இந்த 360 தீர்த்தங்களும் இருந்தன. ஒரு நிமிடம் அந்த 360 தீர்த்தங்களும் திருவண்ணாமலையைச் சுற்றி அமைந்திருப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு பசுமையாக இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே பிரமாண்டமாக தோன்றுகிறது அல்லவா?

ஆனால் புராணங்களில், தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன. ஆக்கிரமிப்பில் இருந்து தப்பி சில தீர்த்தங்கள் மட்டும் இப்போதும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகின்றன.  சில தீர்த்தங்கள் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்வது போல இந்த தீர்த்தத்தை தினமும் காலையில் மனதில் நினைத்தாலே போதும் அந்த தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

பாண்டவர் தீர்த்தம், ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அக்னி தீர்த்தத்திற்கு பக்கத்தில் உள்ள அக்னி லிங்கம் செல்லும் பாதையில் அக்னி லிங்கத்திற்கு மேல் பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த பாண்டீஸ்வரர் கோயில். பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள பாண்டவர் தீர்த்தம் மிகவும் புனிதமானது.

இக்கோயில் கண்கவர் கலை நயத்துடன் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான்  பாண்டவனேஸ்வர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது ஏற்பட்ட அஷ்டம சனி என்னும் தோஷம் நீங்க லிங்கம் பிரதிஷ்டை செய்து தங்கி பூஜித்து நீங்கா பெற்ற தலம் இது என கூறப்படுகிறது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வந்த போது அவர்களுக்கு அஷ்டம சனி பிடித்தது. அப்போது கண்வ மகரிஷியிடம் சாபம் நீங்க ஆலோசனைகள் கூறுங்கள் என்று பாண்டவர்கள் கேட்க, அதற்கு மகரிஷி அடிமுடி காணா நிலையில் உள்ள ஷேத்திரத்திற்கு சென்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டால் உங்களை பிடித்த அஷ்டம சனி நிவர்த்தியாகும் என கூறினாராம்.

அதன்படி திருவண்ணாமலை அக்னி தலத்தில் வந்து தங்கிய பாண்டவர்கள் அக்கினிக்குளம் மேற்கே உள்ள இந்த இடத்தினை தேர்வு செய்து தீர்த்தம் உருவாக்கி , சிவலிங்கம் அமைத்து பூஜை செய்தனர்.

கோடை காலத்தில் நீர் வற்றியதால் பீமன் தனது கடாயுதத்தால் தரையில் தட்டி உருவாக்கிய இந்த தீர்த்தம் பீமன் தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. இன்றும் கோடை காலத்திலும் இந்த தீர்த்த சுனை வற்றாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் வந்து பாண்டவ தீர்த்தத்தில் நீராடி ஈஸ்வரனை வழிபட்டால் அவர்களை பிடித்த அஷ்டம சனி, பாத சனி, ஏழரை சனி விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. பிரார்த்தனை நிறைவேறியதும் சனிக்கிழமைகளில் வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.

மேலும் மண் சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறக்கவும், திருமண தடைகள் விலகவும், இக்கோயிலில் நெய் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.

மண்டகப்படி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயிலில் நேற்று முன்தினம் திருவுடல் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின்போது சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதை அடுத்து அம்மனை மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அண்ணாமலையாரை குமர கோயிலுக்கு கொண்டு சென்று அங்கு இரவு முழுவதும் தங்க வைக்கப்படுவார்.

திருவுடல் விழா முடிந்த பிறகு மறுநாள் கிரிவலம் செல்லும் போது பாண்டீஸ்வரர் கோயிலில் பாண்டவர் தீர்த்தத்தில் இருந்து அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். காலப்போக்கில் பாண்டவர் தீர்த்தம் மலை அடிவாரம் என்பதால் அந்தப் பாதை சுவாமி செல்ல ஏற்றவாறு இல்லாமல் போனது. பாண்டீஸ்வரர் கோயிலுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால்  சுவாமியின் பாதுகாப்பு கருதி குமர கோவிலில் அண்ணாமலையாரை இறக்கி வந்ததாக சிவாச்சாரியார்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதியை சேர்ந்த 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் முயற்சியால் ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோயில் ரூபாய் 1 கோடியில் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலுக்கு வருவதற்கு ஏற்றார் போல் சிறப்பாக சாலைகள் அமைக்கப்பட்டதால் பழமையை போற்றி மீண்டும்  அண்ணாமலையாரை பாண்டவர் தீர்த்தம் பாண்டீஸ்வரர் கோயிலுக்கு எழுந்து அருள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் வார்டு மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் முயற்சியால் அண்ணாமலையார் கோயில்  அறங்காவலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு முதல் பாண்டீஸ்வரர் கோயிலுக்கு அண்ணாமலையார் எழுந்தருளினார்.

இந்நிலையில் நேற்று அண்ணாமலையார் கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்ற போது  உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்

அங்கு அண்ணாமலையார் திருக்கோயில் சிவாச்சாரியார் சங்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் மண்டகப்படி நடத்தினர்.

இந்த சிறப்பான நிகழ்வில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் லாயர் சந்திரமோகன், அண்ணாமலையார் கோயில் அலுவலர்கள், திருவண்ணாமலை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிறகு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரம கிழக்கு வாசல் பகுதியில் (அக்னி லிங்க சாலை) பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை மாமன்ற உறுப்பினர் பிரகாஷ், அண்ணாமலையார் திருக்கோயில் சீர் பாதம் தூக்கி அண்ணாமலை மற்றும் அண்ணாமலையாரை சுமந்து வரும் சீர் பாத தூக்கிகள்,அண்ணாமலையார் கோயில் அலுவலர்கள் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

பீமன் தீர்த்தம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top