Close
மார்ச் 7, 2026 4:23 மணி

பாலமேடு அருகே சாத்தியார் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும்.

இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலை, செம்பட்டி கரடு, உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இந்த அணைக்கு நீர் வரும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணைக்கு நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் ஏற்கனவே சுமார் 10 அடிக்கு மேல் மண் மேவி உள்ளதால் அணையில் முழு கொள்ளளவை மழைநீர் எட்டுவதில்லை. இதனால் இந்த அணையின் மூலம் பாசனை வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் தற்போது வறண்டு காட்சியளிக்கிறது.

இப்பகுதி பாசன விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அணை தூர்வாரப்படவில்லை. இந்த அணையில் நீர்வளத்துறை மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு அவை குத்தகைக்கு விடப்படுகின்றன. இந்த நிலையில் சுமார் 4 அடி அளவே தற்போது தண்ணீர் உள்ளதால் அணையில் வளர்க்கப்பட்டும் மீன்கள் போதிய தண்ணீர் இல்லாததால் தற்போது செத்து மிதக்கின்றன.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அணையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறைவான தண்ணீரில் அதிக அளவில் மீன்கள் உள்ளதால் மதிய நேரங்களில் வெயில் தாக்கத்தால் மீன்கள் செத்து மிதப்பதாக கூறப்படுகிறது.

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையினர் உடனடியாக அணையை தூர்வாரி முழு கொள்ளளவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செத்து மிதக்கும் மீன்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பாசன விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top