வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த இராணுவங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது நெப்போலியன் போனபார்ட்டின் ‘கிராண்ட் ஆர்மி’ . ஆனால், 1812-ல் ரஷ்யா மீது அவர் மேற்கொண்ட படையெடுப்பு ஒரு மாபெரும் பேரழிவில் முடிந்தது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தத் தோல்விக்குக் கடும் குளிரும், பசியும், ‘டைபஸ்’ என்ற நோயும்தான் காரணம் என்று நம்பப்பட்டு வந்தது.
ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மேம்பட்ட டிஎன்ஏ ஆய்வு, நெப்போலியனின் வீரர்களைக் கொன்று குவித்தது நாம் நினைத்தது போல டைபஸ் மட்டும் அல்ல, மாறாக வேறு இரு கொடிய நோய்க்கிருமிகள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
வரலாற்றை மாற்றியெழுதும் பற்கள்
லிதுவேனியாவின் வில்னியஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நெப்போலியன் காலத்து வீரர்களின் எலும்புக்கூடுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். குறிப்பாக, 13 வீரர்களின் பற்களில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் நவீன ‘மெட்டாஜெனோமிக் சீக்வென்சிங்’ தொழில்நுட்பத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டன.
பற்கள் ஒரு காலப் பெட்டகம் போலச் செயல்படுகின்றன. ஒரு மனிதன் இறக்கும் போது அவனது இரத்தத்தில் என்னென்ன கிருமிகள் இருந்தன என்பதை அந்தப் பற்களின் உட்பகுதி இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமளிக்கும் சில உண்மைகளைக் கண்டறிந்தனர்:
பாராடைபாய்டு காய்ச்சல் : ஐந்து வீரர்களின் மாதிரிகளில் சால்மோனெல்லா என்டெரிகா என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டது. இது மோசமான உணவு மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவக்கூடிய ‘பாராடைபாய்டு’ காய்ச்சலை உண்டாக்குகிறது.
மீண்டு வரும் காய்ச்சல்: மூன்று வீரர்களின் மாதிரிகளில் பொரெலியா ரெக்கரண்டிஸ் என்ற பாக்டீரியா இருந்தது. இது பேன்களின் மூலம் பரவக்கூடியது. இது உடலைத் தளர்ச்சியடையச் செய்து, மீண்டும் மீண்டும் கடுமையான காய்ச்சலை உண்டாக்கும்.
அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்த ‘டைபஸ்’ நோய்க்கான கிருமிகள் இந்த 13 வீரர்களின் மாதிரிகளில் எங்குமே காணப்படவில்லை. இறப்புக்கு பங்களித்ததாக ஒரு காலத்தில் சந்தேகிக்கப்படும் மற்றொரு நோயான டிரெஞ்ச் ஃபீவர் (பார்டோனெல்லா குயின்டானா) இருப்பதற்கான எந்த ஆதாரமும் ஆய்வில் கண்டறியப்படவில்லை .
6,00,000 வீரர்களுடன் ரஷ்யாவிற்குள் நுழைந்த நெப்போலியன், திரும்பும் போது வெறும் 1,00,000 வீரர்களுடன் மட்டுமே வர முடிந்தது. போர்க்களத்தில் இறந்தவர்களை விட, இந்த ‘கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால்’ இறந்தவர்களே அதிகம்.
ரஷ்யாவின் போர் தந்திரத்தால், பிரெஞ்சு வீரர்களுக்கு உணவோ, சுத்தமான நீரோ கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அசுத்தமான உணவை உண்ண வேண்டியிருந்தது, இது பாராடைபாய்டு காய்ச்சலைத் தீவிரப்படுத்தியது. மேலும், வீரர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகத் தங்கியிருந்ததால், பேன்களின் மூலம் பரவும் நோய்கள் காட்டுத்தீ போலப் பரவின.
முந்தைய காலங்களில் டிஎன்ஏவை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்பட்ட பிசிஆர் (PCR) தொழில்நுட்பத்தில் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால், தற்போதைய புதிய தொழில்நுட்பம் மிகவும் சிதைந்த டிஎன்ஏ துண்டுகளைக் கூடத் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.
இந்த ஆய்வு, போர் என்பது வெறும் ஆயுதங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு முறைகளும் ஒரு நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
நெப்போலியனின் மாபெரும் இராணுவத்தை வீழ்த்தியது ரஷ்யாவின் பீரங்கிகள் மட்டுமல்ல, அந்த வீரர்களின் உடலில் புகுந்த சிறு கிருமிகளும்தான்!

