வங்கதேசத்தின் ஜவுளித் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், வரும் பிப் 1ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் ஜவுளி ஆலைகளை மூடப்போவதாக அந்த நாட்டு உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் நூலிழைகளால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள், இந்தியாவிலிருந்து வரி சலுகையுடன் நூலிழைகளை இறக்குமதி செய்கின்றனர். இதனால் உள்நாட்டு நூற்பு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலிழைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இந்திய நூலிழைகள் விலை குறைவாக இருப்பதாலும், தரம் சீராக இருப்பதாலும் ஆடை உற்பத்தியாளர்கள் அதையே விரும்புகின்றனர்.
வங்கதேச ஜவுளி ஆலைகள் சங்கத்தின் தகவல்படி, சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான நூலிழைகள் விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கின்றன. மலிவான இந்திய நூலிழைகளின் வருகையால் உள்நாட்டு சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல ஆலைகள் ஏற்கனவே 50 சதவீத உற்பத்தித் திறனுடன் மட்டுமே இயங்கி வருகின்றன. சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில் ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், பிப் 1-க்குள் நூலிழைகளுக்கான வரி இல்லா இறக்குமதி சலுகையை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக 10 முதல் 30 கவுண்ட் வரையிலான பருத்தி நூலிழைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தடையற்ற மற்றும் மானிய விலையில் எரிவாயு விநியோகம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என கூறியுள்ளனர்
அதே சமயம், வங்கதேச ஆடை ஏற்றுமதியாளர்கள் இந்தத் தடையை எதிர்க்கின்றனர். உள்நாட்டு நூலிழைகள் அதிக விலையில் இருப்பதாலும், சர்வதேச பிராண்டுகள் இந்திய நூலிழைகளையே விரும்புவதாலும், இறக்குமதிக்குத் தடை விதித்தால் உலகச் சந்தையில் வங்கதேச ஆடைகளின் போட்டித்தன்மை குறையும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த வேலைநிறுத்தம் நடைமுறைக்கு வந்தால், சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இது வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சமூக அமைதியற்ற சூழலையும் உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வங்கதேசத்தின் இடைக்கால அரசு, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.




