Close
மார்ச் 7, 2026 2:51 மணி

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தை மாதப் பெளா்ணமி 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 4.43 மணிக்கு தொடங்கி 2ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு பௌர்ணமி நிறைவு பெறுகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதே போல் பிப்ரவரி 01ம் தேதியன்று அதிகாலை 01.54 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 02ம் தேதி அதிகாலை 01.01 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது.

1/02/2026  தைப்பூசம் அன்று பூச நட்சத்திரத்தில் அருள்மிகு அண்ணாமலையார் ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தை மாதப் பெளா்ணமி

உத்திராயண காலத்தில் வரும் முதல் பெளர்ணமி, தை மாத பெளர்ணமியாகும். இது தெய்வ அருளால் வேண்டுதல்கள் நிறைவேற்றித் தரும் நாளாகும். தை அமாவாசையை போல் தை பெளர்ணமி விரதமும் மிகவும் உயர்வான பலன்களை தரக் கூடியதாகும். இது வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நம்மை விடுவித்து, வாழ்வில் ஒளி ஏற்றக் கூடிய நாளாகும்.

பெரும்பாலும் தை மாத பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும். இந்த நாளில் புனித நதிகளில் புனித நீராடுவதால் ஆத்மா சுத்தமடையும். அதோடு பெருமாள் வழிபாடும், முன்னோர்கள் வழிபாடும் நமக்கு அவர்களின் ஆசியையும், பாவங்களில் இருந்து மன்னிப்பும் கிடைக்க செய்யும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top