பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம் எழுதிய கடிதம்
முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பல்வேறு பிரச்சனைகள் தீவிரம் எடுத்த நிலையிலும் பெரியாறு வைகை கோட்ட தலைமை பொறியாளர்அது குறித்து எதுவும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற உங்களுடைய நிலைப்பாடு இழிவானது.
பாதுகாக்கப்பட்ட ஒரு அணையில் இருந்து, கலவை இயந்திரம் ஒன்றின் புகைப்படத்தை அணையில் பணி செய்யும் ஒருவர் எடுத்து, சமூக வலைதளத்தில் இந்தக் கலவை இயந்திரம் திருடு போய்விட்டது என்று எழுதுங்கள் என்று சொல்லுகிறார். சம்பந்தப்பட்ட சமூக வலைதள போராளி அந்த இயந்திரம் எங்கள் வணக்கத்திற்குரிய மாமனிதர் கர்னல் பென்னிகுயிக்கால் முல்லைப் பெரியாறு அணைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அது எந்த வழியாக வந்தது என்றும் கூமுட்டைத்தனமாக எழுதினார்.
அது ஒரு நாளிதழிலும் கலவை இயந்திரம் திருடு போய்விட்டதாக செய்தியாக வெளிவந்தது. ஒரு தலைமை பொறியாளராக நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்.? ஏன் கலவை இயந்திரம் விடயத்திலே மௌனம் காத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா…?
பின்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கலவை இயந்திரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கலவை இயந்திரத்தை எங்கள் மாமனிதர் பென்னிகுயிக் கொண்டு வரவில்லை. அது 70, 80 கால கட்டங்களில் அணையினை பலப்படுத்துவதற்காக வாங்கப்பட்டது என்று செயற்பொறியாளர் எழுத்துப்பூர்வமாக கொடுக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.
அப்படியானால் கலவை இயந்திரத்தை எங்கள் மாமனிதர் தான் கொண்டு வந்தார், அது திருடு போய்விட்டது என்று மிகத் தவறுதலாக எழுதிய அந்த பேஸ்புக் போராளிக்கு நீங்கள் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஏன் அமைதி காத்தீர்கள்?.
தயவுசெய்து அந்தக் கலவை இயந்திரத்தை பற்றி மட்டும் பேச வேண்டாம், எழுத வேண்டாம் என்று பாலசிங்கத்திடம் சொல்லுங்கள் என்று அணையில் பணியில் இருக்கும் இளம் பொறியாளர் என் உறவினரை வாட்ஸ்அப் காலில் அழைத்து கதற வேண்டிய தேவை எங்கே வந்தது?.
கலவை இயந்திரத்தை புகைப்படமாக எடுத்து, தனிநபர்களுக்கு கொடுத்து, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடச் சொன்ன நபர், வெளியிட்ட நபர் உள்ளிட்ட எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.
செயற்பொறியாளர் விளக்கம் கொடுத்த பின்னரும், மறுபடி மறுபடி கலவை இயந்திரத்தை குறித்து பேசுபவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். கோழைத்தனமாக அதைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஆண்மை இருந்தால் களத்திற்கு வந்து உண்மையை நிரூபிக்க வேண்டும். இந்த விடயம் குறித்து நீங்கள் இதுவரை கண்டுகொள்ளாததே மிகப்பெரிய குற்றம்.
அடுத்து கம்பத்தில் உள்ள செயற்பொறியாளர் குடியிருப்பு தொடர்பான மராமத்து பணிகளுக்காக 4.30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது தங்களுக்கு தெரியுமா? அந்தப் பணம் எந்த கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் விசாரிக்க வேண்டும்.
அடுத்து ஆறு மாத காலமாக அந்த குடியிருப்பில் எவ்வித ரெஜிஸ்ட்ரேஷனும் இல்லாமல் பயன்படுத்தி மாதம் 8000 ரூபாய் வீதம்,,ஆறு மாதத்திற்கு 48 ஆயிரம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய செயற்பொறியாளர் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை…?
செயற்பொறியாளர் வானத்திலிருந்து குதித்தவரா…?
அரசாங்கம் அணை தொடர்பான பணிகளுக்காக ஒதுக்கிய பொலிரோ வண்டிகளை, தனது சொந்த பயன்பாட்டிற்கு அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தன்னுடைய சொந்த ஊரான செம்பட்டிக்கு இந்த செயற்பொறியாளர், அரசு டிரைவரை பயன்படுத்தி எவ்வித முன் அனுமதியும் பெறாமல் கொண்டு சென்றது கிரிமினல் குற்றம். இதற்கு தெளிவான விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகும் இதுவரை ஏன் செயற்பொறியாளர் மீது நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை?.
அந்த வண்டிக்கான டீசல் செலவை அணைக்கு பொதுப் பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் பணத்தில் போட்டது கூடுதல் கிரிமினல் குற்றம். அரசாங்க பணத்தை மனம் போல் செலவழிப்பதற்கு இந்த செயற்பொறியாளருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
வாரத்தில் ஐந்து நாட்கள் பணியில் இருக்க வேண்டும் என்கிற முறையான அரசின் விதிகளை பின்பற்றாமல், திங்கட்கிழமை காலை 11:30 க்கு பணிக்கு வருவதும், செவ்வாய்க்கிழமை மதியம் சொந்த ஊருக்கு சென்று விடுவதும், புதன்கிழமை பணிக்கு வராமல் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பணிக்கு வருவதும், வெள்ளிக்கிழமை மதியம் தன் சொந்த ஊருக்கு சென்று விடுவதும் என சகல பலம் பொருந்திய சர்வாதிகாரியாக செயற்பொறியாளரை உலவ விட்டது 100 சதவீதம் கிரிமினல் குற்றம்.
இந்த செயற்பொறியாளர் அரசு வண்டியில் உப்பார்பட்டி டோல்கேட்டை தாண்டுவது குறித்தான முறையான சிசிடிவி ஆவணங்களாக கையிலே இருக்கிறது.
கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டை ஏன் நீங்கள் சோதனை செய்யவில்லை? கம்பம் கோட்ட அலுவலகத்தில் பணி செய்யும் கடை நிலை ஊழியரை கேட்டால் கூட இந்த செயற்பொறியாளர் வாரத்தில் எத்தனை நாள் பணிக்கு வருவார் என்பதை சொல்லிவிடுவார் ஏன் நீங்கள் அதை செய்யவில்லை?
கேரள மாநில அரசால் 40 ஆண்டுகளுக்கு மேலாக கொடிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையான முல்லைப் பெரியாறு அணையை குறித்து, இந்த செயற்பொறியாளர் ஏன் அக்கறை காட்டவில்லை என்பதை பொது சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அணையில் தங்கியிருந்து பணி செய்ய வேண்டிய எஸ்.டி ஓ, தனக்கு சில நபர்களை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு, கம்பம் கூடலூர் பகுதி எங்கும் பழைய எஸ்டிஓ வான குமார் ஒரு கோடி ரூபாய்க்கு இரும்பை விற்றுவிட்டு ஓடிவிட்டார் என்று பொய் பிரச்சாரம் செய்த போது நாங்கள் அதை பொது சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அரசு முறையாக பழைய இரும்பு பொருட்களை ஆய்வு செய்து அன்றைய பொதுப்பணித்துறை செயலாளர் சந்திப் சக்சேனா ஐஏஎஸ் மூலமாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஏலம் விடப்பட்ட பொருட்களை,ஒரு தனி மனிதன் அணையில் இருந்து எப்படி எடுத்துச் செல்ல முடியும். அதுவும் ஒரு கோடி ரூபாய்க்கு அங்கு இரும்பு இருந்ததா என்பது அந்த அடிமுட்டாள் எஸ்டிஓவுக்கு தெரியவில்லையா?
சாதிய நோக்கில் ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டு, ஒரு அரசு ஊழியருக்கு நெருக்கடி கொடுப்பது என்பது எந்த வகையில் நியாயம்/ நீங்களே விருப்பப்பட்டு ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்து விடுங்கள். இல்லையேல் உங்களை எங்காவது தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்றி விடுவார்கள் என்று பழைய எஸ்.டி.ஓ குமாருக்கு அறிவுறுத்தல் கொடுப்பதற்கு இந்த எஸ்டிஓ ராஜகோபாலுக்கு என்ன தகுதி இருக்கிறது.
அணையில் தங்கி இருந்து பணி செய்ய வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் இந்த எஸ்டிஓ பொறுப்பேற்ற பிறகு, எத்தனை நாள் அணைக்கு சென்றிருக்கிறார் என்று என்றாவது நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா?
அணையில் தங்கியிருந்து பணி செய்ய வேண்டிய இளம் பொறியாளரை கடந்த ஒரு மாதமாக காணவில்லை. அவ்வப்போது கம்பத்தில் உள்ள அலுவலகத்திற்கு வருவதும் நேரம் கிடைத்தால் அணைக்கு செல்வதுமாக இருக்கும் அவருடைய பணி ஏன் வரைமுறை செய்யப்படவில்லை.
முழுமையாக அணையில் தங்கி இருந்து பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் எஸ்டிஓ மற்றும் இளம் பொறியாளர் ஆகிய இருவருக்கும் ஊர் சுற்றுவதற்கு சுதந்திரத்தை கொடுத்த அதிகாரம் யாருக்கு இருக்கிறது?
மேலாக இந்த எஸ்டிஓ தான் பொறுப்பேற்றதும் தேனி திட்டச் சாலையில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு அரசு வாகனத்தை கொண்டு சென்றதும், அதற்கு அரசு டிரைவரை பயன்படுத்தியதும், எஸ்டிஓ வை இறக்கி விட்டு விட்டு, தன்னுடைய வீட்டிற்கு அந்த வண்டியை அரசு டிரைவர் கொண்டு சென்று நிறுத்தியதும், அரசு விதிகளில் எங்காவது இருக்கிறதா?
அப்படி தன்னுடைய வீட்டிற்கு வண்டியை எடுத்துச் செல்வதற்கான எரிபொருள் செலவை அரசாங்கத்தின் பணத்தில் கையாடல் செய்த குற்றத்திற்காக ஏன் எஸ் டி ஓ ராஜகோபால் இதுவரை கைது செய்யப்படவில்லை?
பழைய எஸ் டி ஓ குமார் ஒரு கோடி ரூபாய்க்கு இரும்பை விட்டதாக சொல்லித் திரியும் இந்த எஸ் டி ஓ ராஜகோபால் எதற்காக மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்கவில்லை…? எதற்காக வழக்கு தொடுக்கவில்லை…?
தாங்கள் செய்த குற்றத்தை மறைப்பதற்காக, பழைய எஸ்டிஓ வை இடமாற்றம் செய்ததோடு, அடுத்தடுத்த இரண்டு உதவி செயற்பொறியாளர்களை இடமாற்றம் செய்ததற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன. நபர்கள் யார்..?
தற்காலிக நிரந்தர பணியாளர்களைக் கொண்டு நான் அணையை நிர்வாகம் செய்து கொள்வேன் என்று செயற்பொறியாளர் கூறுவதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன…?
அரசு விதிகளுக்கு புறம்பாக தொடர்ந்து கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் மேற்கண்ட மூவர் மீதும் ஏன் நீங்கள் எந்த வித விசாரணையும் செய்யவில்லை நடவடிக்கை எடுக்கவில்லை.
தாங்கள் அணைக்கு செல்வதற்கு பதிலாக சண்முகா நதியிலிருந்து ஒரு பொறியாளரை அணையில் கொண்டு போய் தங்க வைப்பதும் தாங்கள் சாவகாசமாக ஊர் சுற்றுவதுமாக இருக்கும் அதிகாரிகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
கேரளாவின் அடாவடி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையை காக்க வேண்டிய பொறுப்பான அதிகாரிகள், தங்கள் தனிமனித சுகத்திற்காக அரசு வண்டிகளை பயன்படுத்துவதும், அரசு இல்லத்தை வாடகை கொடுக்காமல் பயன்படுத்துவதும், எரிபொருளுக்காக பணத்தை கையாடல் செய்வதுமாக இருக்கும் நிலையில், ஒரு தலைமை பொறியாளராக ஏன் எவ்வித நடவடிக்கைக்கும் உங்களுடைய பரிந்துரை இல்லை என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
அணை எவன் அப்பன் வீட்டு சொத்துமல்ல. அது ஐந்து மாவட்டத்தில் வாழும் ஒரு கோடி மக்களுடைய வாழ்வாதாரம்.
அந்த அணையை மையப்படுத்தி தொடர்ந்து சீர்குலைப்பு வேலைகளை செய்து வரும் செயற்பொறியாளர், எஸ் டி ஓ, இளம்பொறியாளர் ஆகிய மூவர் மீதும் துணை ரீதியான நடவடிக்கை எடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறுகளை உறுதி செய்து, சிறைக்கு அனுப்புவதற்கான வேலைகளை நீங்கள் தொடங்காவிட்டால் உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கைக்கு நாங்கள் தயாராவோம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நாங்கள் கேட்டு பெற்றிருக்கும் தகவல்களைக் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
அதிகாரிகள் மீது ஒரு தலைமை பொறியாளராக நீங்கள் அரசு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நீங்களும் வழக்கில் சேர்க்கப்படுவீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
முல்லைப் பெரியாறு அணையை காப்பதற்காக இந்த பென்னிகுயிக் பாலசிங்கம் எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.கூடுதலாக கம்பத்தில் உள்ள அலுவலகத்தை தேக்கடிக்கு இடம் மாற்றம் செய்வது தாமதமானால், கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதத்தை நடத்த வேண்டிய தேவையும் ஏற்படும்.
இந்த அணையைக் காப்பதற்காக எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கும்
ச.பென்னிகுயிக் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்
(விரைவில் சங்கத்தின் பெயர் ஐந்து மாவட்ட விவசாய சங்கம் என்று மாற்றப்படும். அதற்கான சட்ட ரீதியான வேலைகளையும் தொடங்கி இருக்கிறேன்)



