திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பர்வதமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலையில் சிவன் கோயில் உள்ளது. கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் அமைந்துள்ள பர்வதமலை கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரம் கொண்டது. இங்கு மல்லிகார்ஜுன பிரம்மராம்பிகை அம்மாள் உள்ளிட்ட கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயிலை 3ஆம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக சொல்லப்படுகிறது.
இங்கு பலர் ஆன்மீக பயணமாக சென்று வருகிறார்கள். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
அண்மைக்காலமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபத்துகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் வனத்துறை இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இரவு நேரம் அல்லது மாலை நேரத்தில் மலையேறுவது ஆபத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்வதமலையில் கடப்பாரை படிக்கட்டு என்ற ஒரு கரடுமுரடான வழி இருப்பதால் அங்கு அந்த கடப்பாரைகள் பிடித்துக் கொண்டு ஏறுவது அபாயகரமானதாகும். அதிலும் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் மலையேறி சிவனிற்கு அபிஷேகம் நடத்தலாம். இந்த கோயிலுக்கு வர படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி ஆகிய கடுமையான பாதைகளை கடந்துதான் செல்ல வேண்டும்.
இதில் ஆபத்துகள் நிறைய இருப்பதால்தான் வனத்துறையினர் விதிமுறைகளை வகுத்துள்ளனர். எனவே பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட விதிகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்
அதிகாலை 5 மணி முதல் 1 மணி வரை மட்டும் பர்வதமலை ஏற, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நேரத்திற்கு மேல் எந்த நேரத்திலும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மலை ஏறும் பாதையும் மூடப்பட்டிருக்கும். இரவு நேரத்தில் மலை ஏறுவது மிகவும் ஆபத்தானதாக கருத்தப்படுவதால், மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு மலையேற அனுமதி வழங்கப்படும். இதர மாவட்டத்தினர் 800 பேர் இணைய வழியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
பக்தர்கள் மலை ஏறும் போது அடையாள அட்டை காட்ட வேண்டும். பக்தர்கள் முன்பதிவு செய்து மலையேறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்காக அடிப்படை முகாம்களும் அமைக்கப்படும்.
மேலும், பர்வதமலை ஏறும்போது, வயதானவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதோடு, உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, 18 வயது முதல் 60 வயது வரை உடல் தகுதி உள்ளவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளை பக்தர்கள் அனைவரும் கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கேட்டுக் கொண்டார். “பக்தர்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை” என, அவர் வலியுறுத்தினார். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.




