நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேசியதாவது:
சிறுதானிங்கள் பெரும்பாலும் மானாவரி நிலங்களிலும், குறைந்த மண் வளம் கொண்ட நிலங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் சாகுபடி செய்யக்கூடிய பயிராகும். மேலும் சிறுதானிங்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. நீர் இருப்பு குறைந்து வரும் இக்காலக்கட்டத்தில் சிறுதானிய சாகுபடி முக்கியத்துவம் பெறுகின்றது.
விவசாயிகள் உணவு பொருட்களை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், அதனை மதிப்புக்கூட்டி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும்.
தற்போது இயற்கை உணவுகள் மற்றும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகளவில் உள்ளது. விவசாயிகள் ஒரு கூட்டமைப்பாக இணைந்து, உங்களுக்கென தனியாக ஒரு வியாபார குறியீட்டினை உருவாக்க வேண்டும். அதை பிரபலப்படுத்தி விற்பனையை அதிகரிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் 88,238 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. சிறுதானியங்கள் சாகுபடி பரப்பில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் இரண்டாவது இடத்திலும், சோளம் சாகுபடி பரப்பில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்திலும் உள்ளது.
அனைத்து விவசாயிகளுக்கும் சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடத்தப்படுகிறது என அவர் கூறினார்.
விழாவில் 6 விவசாயிகளுக்கு ரூ. 12.11 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைத்தல், மகா கனி மரக்கன்றுகள், செம்மரக்கன்றுகள் மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைத்தல் போன்ற இடுபொருட்களை மானிய விலையில் கலெக்டர் வழங்கினார்.




