Close
மார்ச் 7, 2026 2:51 மணி

மாணவிகளுக்கு ஆசிரியா் பாலியல் சீண்டல்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான குப்பனத்தம் அணை அருகில் உள்ளது துரிஞ்சிகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமாா் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தப்பள்ளியில் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் மாணிக்கவேல் என்பவா் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவர், சமீபகாலமாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மாணவிகளை அவா் மிரட்டி வந்தாராம்.

இந்நிலையில் ஆசிரியர் மாணிக்கவேல் தொல்லை அதிகரித்ததை அடுத்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரியை தொடா்பு கொண்டு, ஆசிரியா் மாணிக்கவேலுவின் செயல் குறித்து தெரிவித்துள்ளனா்.

திடீரென பள்ளியை முற்றுகையிட்டு குறிப்பிட்ட ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகைய கொடூரச் செயல்களைச் செய்த ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியா் மாணிக்கவேல் தலைமறைவாகிவிட்டாா். மேலும், அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், ஜவ்வாதுமலை வட்டாரக் கல்வி அதிகாரிகள், செங்கம் காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஆசிரியா் மாணிக்கவேலை கண்டுபிடித்து, விசாரணை செய்து அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியில் பெரும்பாலும் ஏழை விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தற்போது இது போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி அச்சம் கொண்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து விசாரிக்காமல் தங்களிடமே விசாரணை மேற்கொள்வது நியாயம் இல்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் ஆசிரியரின் தொல்லை தற்போது தான் தெரிந்தது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பாகவும் நடந்திருக்கலாம். முழு விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top