Close
மார்ச் 7, 2026 4:40 மணி

தாட்கோ மூலம் சோலார் பேனல் டெக்னீசியன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தாட்கோ மூலம் சோலார் பேனல்கள் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து சோலார் பேனல்கள் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 32 வயது வரை நிரம்பி இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 10, +2, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம் 45 நாட்கள். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன், ஆரம்பகால மாத சம்பளமாக ரூ. 18,000 முதல் ரூ. 30,000 வரை கிடைக்க வழிவகை செய்யப்படும். வேலைவாய்ப்பினை விரும்பாத இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

இப்பயிற்சி பெற தாட்கோ.காம் என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னையில் உள்ள ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம், டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலமாக வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட தாட்கோ அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top