திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 4.02 கோடி செலுத்தியுள்ளனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலாகும். அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ரூ. 4.02 கோடி ரொக்கம்
மாதம்தோறும் அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கோயில் உண்டியலில் 4 கோடியே 2 லட்சத்து 879 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 135 கிராம் தங்கம், 1420 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் சுமார் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வருவது குறிப்பிடத்தக்கது.




