தமிழகத்தில் உள்ள கிராமப்புறக் கோயில் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சென்னை மயிலாப்பூரில் இன்று (சனிக்கிழமை) பிரம்மாண்டமான கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்தச் சிறப்பு நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, பூசாரிகளுக்கான புதிய ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இம்மாநாட்டில் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெறவுள்ளன:
மாதாந்திர ஊக்கத்தொகை: கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
திருப்பணி நிதியுதவி உயர்வு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கான நிதி, ஒரு லட்சத்திலிருந்து ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 5,000 கோயில்கள் பயன்பெற்றுள்ளன.
ஓய்வூதிய அதிகரிப்பு: பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ஏற்கனவே ரூ. 4,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
நல வாரிய உதவிகள்: பூசாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி மற்றும் குடும்ப ஓய்வூதியம் போன்ற பலன்கள் பூசாரிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மாநாட்டிற்கு கோயிலில் வேலை செய்யும் பணியாளர்களையும் ஒப்பந்த ஊதியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களையும் மாநாட்டில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பூசாரிகள் மாநாட்டிற்கு கோயில் பணியாளர்களும் தூய்மை பணியாளர்களும் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என புரியாமல் கண்டிப்பான உத்தரவு காரணமாக மாநாட்டிற்கு அவர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது




