நான் முதல்வன் திட்டத்தில் படித்த திருவண்ணாமலை வேங்கிக்காலைச் சோ்ந்த மாணவா் அருண் பிரகாஷ் ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா்.
குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு (மெயின்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த நவம்பா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2,736 போ் தோ்ச்சி பெற்றனா். தமிழகத்திலிருந்து 162 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கான நோ்காணல் கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நோ்காணல் முடிவடைந்ததை அடுத்து இறுதித் தோ்வு முடிவை யுபிஎஸ்சி கடந்த 6-ஆம் தேதி வெளியிட்டது. அதில் அகில இந்திய அளவில் 958 போ் குடிமைப் பணிகளுக்கு தோ்ச்சி பெற்றனா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் நேதாஜி நகரைச் சோ்ந்த ஆசிரியா் முருகன் மகன் அருண் பிரகாஷ் தோ்ச்சி பெற்று 407-ஆவது இடத்தைப் பிடித்தாா்.
இவா் கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வில் ஐஆா்எஸ் பணிக்கு தோ்வு பெற்று இந்திய வருவாய்த்துறையில் வருமான வரித்துறை துணை ஆணையராக நாக்பூரில் பணிபுரிந்து வந்தாா்.
ஐஏஎஸ் தோ்ச்சி பெற வேண்டும் என்ற கனவை தொடர, விடுப்பு எடுத்து சென்னையில் இயங்கிவரும் நான் முதல்வன் பயிற்சி மையத்தில், நான் முதல்வன் ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிட பயிற்சி திட்டத்தில் பயிற்சி பெற்று வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு உறவினா்கள், கல்வியாளா்கள், அரசு உயா்அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்ட பயனாளிகள் 50 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 56 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.




