மேற்கு வங்க மாநிலத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மேற்கொண்ட சமீபத்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படத்தை முன்வைத்து, ஜனாதிபதிக்கு பிரதமர் உரிய மரியாதை அளிக்கவில்லை என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டார்ஜிலிங்கில் நடைபெற்ற 9-வது சர்வதேச சந்தால் மாநாட்டிற்காக ஜனாதிபதி முர்மு கடந்த சனிக்கிழமை மேற்கு வங்கத்திற்கு விஜயம் செய்தார். அந்த நிகழ்வின்போது பேசிய ஜனாதிபதி, தன்னை வரவேற்க முதல்வர் பானர்ஜியோ அல்லது மாநில அமைச்சர்களோ வராதது குறித்து அதிருப்தி வெளியிட்டார்.
பொதுவாக ஜனாதிபதி வரும்போது முதல்வர் வரவேற்க வேண்டும், ஆனால் அவர் வரவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது குறித்தும், பழங்குடியினரின் நலனில் மாநில அரசுக்கு அக்கறை இல்லையோ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதியின் இந்த வேதனையை அடுத்து, பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில் திரிணாமுல் அரசை கடுமையாக விமர்சித்தார். “திரிணாமுல் அரசு அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு மாநில நிர்வாகமே பொறுப்பு. இது ஜனாதிபதி பதவிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் இழைக்கப்பட்ட அவமானம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், அக்கட்சியின் தலைவர்கள் இருவர் ஒரு புகைப்படத்தை ஏந்தி நிற்கின்றனர். அது மார்ச் 31, 2024 அன்று, பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்டது.
அந்தப் புகைப்படத்தில், அத்வானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நாற்காலியில் அமர்ந்திருக்க, நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான திரௌபதி முர்மு அவர்கள் அருகில் நின்று கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதி பதவியை மதிப்பது குறித்து பிரதமர் பெரிய அளவில் பேசி வருகிறார். ஆனால் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். பிரதமர் வசதியாக அமர்ந்திருக்கும்போது, ஜனாதிபதி நின்று கொண்டிருக்கிறார். இது ஜனாதிபதி பதவியை சாதாரணமான முறையில் புறக்கணிப்பதையே காட்டுகிறது என்று மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
மம்தா பானர்ஜியின் விளக்கம்
நெறிமுறை மீறல் ஏதும் நடக்கவில்லை என்று மறுத்துள்ள மம்தா பானர்ஜி, இந்த மாநாட்டை ஒரு தனியார் அமைப்பு ஏற்பாடு செய்தது. அந்த அமைப்புக்கு ஜனாதிபதிக்கான நிகழ்ச்சியை நடத்தும் திறன் இல்லை என்று மாநில அரசு ஏற்கனவே ஜனாதிபதி அலுவலகத்திற்குத் தெரிவித்தது. ஜனாதிபதி செயலகம் வழங்கிய நெறிமுறைப் பட்டியலின்படி, சிலிகுரி மேயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். அதில் முதல்வர் பெயர் இடம்பெறவில்லை. பாஜக தனது கட்சி ஆதாயத்திற்காக ஜனாதிபதி பதவியை தவறாகப் பயன்படுத்துவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோதல் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் சூடான வாக்குவாதங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. குடியரசுத் தலைவரின் நிகழ்வின் போது நடந்ததாகக் கூறப்படும் தவறுகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மாநில தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தியிடமிருந்து அறிக்கை கோரினார்.
அதில் முதல்வர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஏன் ஜனாதிபதியை வரவேற்க வரவில்லை? ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாதது ஏன்? நிர்வாகம் தேர்ந்தெடுத்த பாதையில் குப்பைகள் அகற்றப்படாதது ஏன்? டார்ஜிலிங் மாவட்ட நீதிபதி, சிலிகுரி காவல் ஆணையர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆகியோர் பொறுப்பு. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குறித்து அறிக்கை கேட்டுள்ளது




