Close
மார்ச் 10, 2026 12:31 காலை

ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அவசர வேண்டுகோள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு, சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்ய முடியாமல் கடலில் தேங்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் திருப்பி விடுமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை செயலாளர் கிறிஸ் ரைட் கூறியதாவது: தற்போது சீன சுத்திகரிப்பு நிலையங்களில் இறக்குமதி செய்யப்படுவதற்காக சுமார் 10 கோடி பீப்பாய்களுக்கும் அதிகமான ரஷ்ய கச்சா எண்ணெய் கடலில் காத்திருக்கிறது. அங்கு இறக்குமதி செய்ய இன்னும் பல வாரங்கள் ஆகலாம். அந்த எண்ணெயை இந்தியா வாங்கி தனது சுத்திகரிப்பு நிலையங்களுக்குப் பயன்படுத்தினால், சந்தையில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்த அச்சத்தைக் குறைக்க முடியும் என்று கூறினார்

ஈரான் உடனான போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடையால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மார்ச் 5 முதல் ஏப்ரல் 4 வரை (30 நாட்கள்) ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, மார்ச் 5ம் தேதிக்கு முன்பே கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெய்க்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். இந்த எண்ணெய் இந்திய துறைமுகங்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும். வாங்கும் நிறுவனம் இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நடவடிக்கை ரஷ்யா மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இது சந்தையை நிலைப்படுத்துவதற்கான ஒரு நடைமுறைச் சார்ந்த, குறுகிய கால முயற்சி மட்டுமே. இந்தியா எங்களின் மிகச்சிறந்த கூட்டாளியாகச் செயல்பட்டு வருகிறது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியா ஏற்கனவே தனது தேவைகளுக்காக அமெரிக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top