Close
மார்ச் 10, 2026 5:46 மணி

உலகளாவிய ஆயுதப் போட்டியை மாற்றிய ஒரு உளவு ட்ரோன் வரலாறு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தில் ஏவுகணைகளை விட ‘ட்ரோன்கள்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில், ஒரு நாட்டின் தொழில்நுட்பத்தை மற்றொரு நாடு நகலெடுத்து மேம்படுத்தும் ஒரு ‘மல்டிவெர்ஸ்’ போன்ற சூழல் உருவாகியுள்ளது.

ஒரு காலத்தில் தனது ராணுவத் தேவைகளுக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருந்த ஈரான், இன்று உலகின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான ‘காப்பி-கேட்’ வரலாறு உள்ளது:

தெற்கு ஆப்கானிஸ்தானின் காந்தஹார் வானில் இருளில் கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத ஒரு விமானம் மெதுவாக வளைந்து சென்றது. அதன்சென்சார்கள் எல்லைகளையும் பள்ளத்தாக்குகளையும் அமைதியாக ஸ்கேன் செய்து கொண்டிருந்தன.

அந்த விமானம் RQ-170 சென்டினல். லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, சிஐஏ அமைப்பால் இயக்கப்பட்ட இந்த ட்ரோன், எதிரி நாடுகளின் வான்வெளியில் சிக்காமல் ஊடுருவி உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் திறன் கொண்டது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிந்தைய மிக ரகசியமான உளவுப் பணிகளுக்காக அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் இது. 2011-ல் ஒசாமா பின்லேடனைக் கொல்ல பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னதாக, அங்குத் தொடர்ந்து உளவு பார்க்க இந்த ட்ரோன்களே பயன்படுத்தப்பட்டன.


அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் இது “காந்தஹாரின் மிருகம்” என்று அழைக்கப்பட்டது. அமெரிக்க வான்வழி கண்காணிப்புத் தொழில்நுட்பத்தின் உச்சமாக இது கருதப்பட்டது.

ஆனால், 2011 டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், இந்த ட்ரோனின் பயணம் ஒரு எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்தது. ஆப்கானிஸ்தான் தளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக, அது ஈரானுக்குள் தரையிறங்கியது.

2011 டிசம்பர் 4 அன்று, தங்கள் எல்லைக்குள் ஒரு அமெரிக்க உளவு ட்ரோனைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவித்தது. ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து 225 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மர் அருகே அது பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு போர் முறையைப் பயன்படுத்தி, ட்ரோனின் ஜிபிஎஸ் சிக்னல்களைக் கட்டுப்படுத்தி, அதைத் தரை இறக்கியதாக ஈரான் கூறியது.

இதனை மறுத்த அமெரிக்கா, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ட்ரோன் திசை மாறிச் சென்றதாக. “இது தற்செயலாக நடந்திருக்க 95% வாய்ப்புள்ளது” என அமெரிக்க அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.

இதன் ‘வௌவால்-இறக்கை’ வடிவமும், ரேடாரில் சிக்காத பூச்சுகளும் அமெரிக்காவின் மிக விலையுயர்ந்த F-35 போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் போன்றதாகும். இது ஈரானிடம் சிக்கியது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. அன்றைய அதிபர் பராக் ஒபாமா, ட்ரோனைத் திருப்பித் தருமாறு ஈரானிடம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஈரான் அதை மறுத்துவிட்டது.

இந்த ஒரு சம்பவம், இன்று உலகம் முழுவதும் நாம் பார்க்கும் ‘ரிவர்ஸ் இன்ஜினியரிங்’ மற்றும் தொழில்நுட்ப நகலெடுப்புப் போட்டியைத் தொடங்கி வைத்தது.

ட்ரோனைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக, அதைத் துண்டு துண்டாகப் பிரித்து ஆராய்ந்த ஈரான், அதன் சொந்தப் பதிப்புகளைத் தயாரிக்கத் தொடங்கியது.

ஷாஹெட்-129

சிமோர்க் மற்றும் சேகே : இவை அப்படியே RQ-170-ன் வடிவத்தை ஒத்திருந்தன.
ஷாஹெட்-129 : இஸ்ரேலிய ஹெர்ம்ஸ் 450-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இது, ஈரானின் மிக முக்கியமான ஆயுதமேந்திய ட்ரோனாக மாறியது.

தற்போது உக்ரைன் போரில் ரஷ்யாவால் பயன்படுத்தப்படும் ஷாஹெட்-136 காமிகேஸ் ட்ரோன்கள், இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாகும். இவை மிகக் குறைந்த செலவில் (சுமார் 20,000 டாலர் – 35,000 டாலர்) தயாரிக்கப்பட்டு, எதிரி நாட்டு இலக்குகளைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் அழிக்கின்றன.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இப்போது அமெரிக்காவே ஈரானின் ட்ரோன் வடிவமைப்பை நகலெடுக்கத் தொடங்கியுள்ளது. ஈரானின் ஷாஹெட்-136 ட்ரோன்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க ராணுவம், லூகாஸ் என்ற குறைந்த விலை தாக்குதல் ட்ரோனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

“நாங்கள் ஈரானிய ட்ரோனைப் பிடித்தோம், அதை அமெரிக்காவிற்கு அனுப்பி, ‘மேட் இன் யுஎஸ்ஏ’ முத்திரையுடன் மீண்டும் அவர்களுக்கே எதிராகப் பயன்படுத்துகிறோம்,” என்று அமெரிக்க அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

2011-ல் ஈரானில் விழுந்த அந்த ஒரு ஒற்றை உளவு ட்ரோன், இன்று உலகப் போர் முறையையே மாற்றியமைத்துள்ளது. வல்லரசு நாடுகளின் தொழில்நுட்பத்தை சிறிய நாடுகள் நகலெடுப்பதும், பின் அதே குறைந்த விலை தொழில்நுட்பத்தை வல்லரசுகளே மீண்டும் பின்பற்றுவதும் ஒரு முடிவில்லாத சுழற்சியாக மாறியுள்ளது.

இந்த மோதலில் ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் பயன்படுத்தும் ஒரு ட்ரோன் ஈரானிடம் சிக்கினால், சில ஆண்டுகளில் அதன் ஒரு மேம்படுத்தப்பட்ட ‘ஈரானிய பதிப்பு’ வெளிவருகிறது.

ஈரானின் ‘ஷாஹெட்-129’ பார்ப்பதற்கு அமெரிக்காவின் ‘MQ-1 Predator’ போலவே இருக்கும். அதேபோல், இஸ்ரேலிய ட்ரோன்களின் பாகங்கள் மற்றும் வடிவமைப்புகளும் ஈரானிய தயாரிப்புகளில் பிரதிபலிக்கின்றன. இது ஒரு நாட்டின் தொழில்நுட்பத்தை மற்றொன்று திருடும் அல்லது நகலெடுக்கும் ஒரு தொடர் சங்கிலியாக மாறியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த ட்ரோன் யுத்தம் வெறும் ஆயுதப் போட்டி மட்டுமல்ல, இது ஒரு தொழில்நுட்பப் போட்டியும் கூட. ஒரு நாடு கண்டுபிடிக்கும் நுட்பத்தை மற்றொரு நாடு நகலெடுத்து அதை அந்த நாட்டுக்கே எதிராகப் பயன்படுத்தும் இந்த ‘நகல் ட்ரோன்களின் உலகம்’ வரும் காலங்களில் போர் முறையையே முற்றிலும் மாற்றியமைக்கப் போகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top