Close
ஜூலை 28, 2026 7:49 காலை

குரு பூர்ணிமா சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

குரு பூர்ணிமா என்பது சீடர்கள் தங்களுக்கு ஞானம் புகட்டிய ஆசிரியர்களைப் போற்றும் புனித நாளாகும். இது ஆஷாத் மாத பௌர்ணமி நாளான ஜூலை 29, 2026 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது .

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள்.

அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக “குரு பூர்ணிமா” கொண்டாடப்படுகிறது. வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி, கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள்.

அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள்.

பாரதம் சொன்ன வியாசர், ராமாயணம் எழுதிய வால்மீகி, உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம். இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம்.

தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஆடி பௌர்ணமி அன்று குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான குரு பூர்ணிமா விழா ஜூலை 29, 2026 அன்று அனுசரிக்கப்படுகிறது.

அன்று அதிகாலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் மற்றும் ஆசிரமத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் , மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்று கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்படும் என்று ஆசிரமத் தலைவர் லாயர் சந்திரமோகன் தெரிவித்தார்.

மேலும் குரு பூர்ணிமா சிறப்புகள் குறித்து அவர் கூறுகையில்; குரு பூர்ணிமா என்று கூறப்படும் ஆடி மாத பௌர்ணமி, உண்மையில் வியாச பௌர்ணமியாகும். இறைவனிடம் இருந்து கிடைக்கப் பெற்ற வேதங்களை நான்காக பிரித்து 18 புராணங்களையும் எழுதிய வேதவியாசர் பிறந்தநாளே வியாச குரு பூர்ணிமா,

*நீ வேறு நான் வேறு அல்ல என்பது அத்வைதம், அதன்படி பார்த்தால் நமக்குள் எல்லாம் இருக்க அதை கற்பிக்க இன்னொருவர் எதற்கு? தனக்கு மேல் கற்பிக்க குருவென்று ஒருவர் யாருக்கு இல்லையோ அவரே குருவாவார்.*

சைவர்களுக்கு கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனாதான குமாரர் நால்வருக்கு உபதேசித்த தென்முக தட்சிணாமூர்த்தியும், அதை போலவே வைணவர்களுக்கு ஹயக்ரீவருமே நிஜகுரு ஆவார்கள். ராஜஸ், சத்வா, தாமம் என்று நமக்குள் இருக்கும் மூன்று குணங்களின் அடையாளமாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரே குரு ஆவார்கள்.

இதையே எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று அறிவியல் கூறும். இந்த ஆடி மாத பௌர்ணமியில் சித்தர்கள், மகான்கள் ஆகியோர் இறைவனை குருவாக கொண்டு வழிபாடு செய்வார்கள். இவரைப் போல ஆவேனோ என காஞ்சி மகா பெரியவா போன்றோரால் போற்றப்பட்ட மகான் சேஷாத்ரி சுவாமிகள் போல இறையருளால் உபதேசம் பெற்றவர்களும் உண்டு,

குரு அவசியமா? இது இப்போது மட்டுமல்ல… காலம் காலமாக கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான். இதில் அதிசயம் என்னவென்றால், இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள் அனைவருமே… இறுதியில் ‘சத்குருக்களிடம்’ சங்கமித்து விட்டததுதான்.

நமது வாழ்வுக்கு வழிகாட்டி உதவ நினைக்கும் நண்பர், நம் கையில் அதற்கு உரியவரின் முகவரியை மட்டும் கொடுத்து அவரை சந்திக்கச் சொன்னால் அதில்தான் எத்தனை சந்தேகங்களும், சங்கடங்களும் இருக்கும்.

அதே நேரத்தில், அந்த முகவரியை நமக்கொடுத்த நண்பர் தாமே முன்வந்து, அந்த நபரை அறிமுகப் படுத்த நம்முடன் பயணித்தால் அது எவ்வளவு நம்பிக்கையுடனும், நிம்யதியாகவும் இருக்கும்.

அது போலவேதான் இறைவன். கையில், கடவுளின் முகவரியுடன் காலம் காலமாக அவரத் தேடி, அலைந்து கொண்டிருக்கும் பக்தனை அந்த பக்தனின் தாபத்தை உணர்ந்து, அவனைத் தம்மிடம் ஈர்த்துக் கொள்வதற்காக ஒரு ‘சத்குருவின்’ உருவைக் கொண்டு, எந்த வித சிரமுமின்றி அவரின் பேரன்பு வட்டத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்.

பக்தன் செய்ய வேண்டியது, அந்த சத்குருவை நம்பிக்கையுடன் தொடர்வது மட்டுமே, குருவருளே திருவருளைக் கொண்டு வந்து சேர்க்கும் அத்தகைய குருமார்களை இந்த ஆடி மாத குரு பூர்ணிமா திருநாளில் வணங்கி வழிபட்டு இறையருள் பெறுவோம் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top