Close
செப்டம்பர் 12, 2026 12:38 மணி

பட்டா கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் உள்பட 800 பேர் திரண்டதால் பரபரப்பு

பட்டா வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் என, 800க்கும் மேற்பட்டோர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாரைக்கிணறு அன்சர்வே பிளாக் -2 நிலப்பகுதியை, வனத்துறை காப்புவனமாக மாற்றம் செய்வதற்காக, 1954ல், தமிழக அரசு வனச்சட்டம் பிரிவின் கீழ் கெஜட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அங்கு தொடர்ந்து விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். 1954ன் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ரத்து செய்வதோடு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

அவற்றை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க, இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி ஆகியோர் தலைமையில், நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆட்சியர் நேரில் வந்து எங்களின் குறைகளை கேட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். டி.ஆர்.ஓ., சரவணன், ஆர்டிஓ சாந்தி ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாமல், மாவட்ட ஆட்சியர் வந்து பேசவேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், கடும் வெயில் காரணமாக 2 மூதாட்டிகள் மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என, 3 பேர் திடீரென மயக்கம் அடைந்தனர். அவர்களை, அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

3 மணி நேர காத்திருப்புக்கு பின், விவசாயிகளின் பிரதிநிதிகள் ஆட்சியர்அலுவலக கூட்ட அரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் மதுபாலன் அவர்களின் கோரிக்கையை கேட்டதுடன், உரிய தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top