மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக கத்தாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதித் திறன் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் கத்தாரில் உள்ள ‘ராஸ் லஃப்பான்’ தொழில் நகரத்தில் உள்ள எரிவாயு ஆலைகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியது.
அந்த இழப்புகளால், இந்தியாவில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி முதல் ஹீலியத்தைப் பயன்படுத்தும் தென்கொரியாவின் சிப் தயாரிப்பாளர்கள் வரை பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பழுதுபார்ப்புப் பணிகளால் ஆண்டுக்கு12.8 மில்லியன் டன் திரவ இயற்கை எரிவாயு விநியோகம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முடங்கி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கான விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
கத்தார்எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி, இந்தத் தாக்குதல்களை “நியாயமற்றவை மற்றும் அறிவற்றவை” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். புனிதமான ரமலான் மாதத்தில் ஒரு சகோதர முஸ்லிம் நாடான ஈரான் இத்தகைய தாக்குதலை நடத்தும் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,”இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால், அது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விஷயம். அதற்கும் எங்களுக்கும் இந்தப் பிராந்தியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே உலகில் உள்ள அனைவரும், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, அனைவரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறினார்
தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தின் அளவு, இப்பகுதியை 10 முதல் 20 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது. மேலும், இது பலருக்குத் தங்குவதற்கும் பிற தேவைகளுக்கும் ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருகிறது. அந்தப் பிம்பம் இப்போது ஆட்டம் கண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
பாதிப்புகள் மற்றும் பொருளாதார இழப்பு:
கத்தாரின் 14 எல்என்ஜி ஆலைகளில் இரண்டு ஆலைகள் மற்றும் ஒரு எரிவாயு-திரவ ஆலை இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன் எரிவாயு உற்பத்தி முடங்கியுள்ளது. இந்தச் சேதங்களைச் சரிசெய்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடக்கத்தினால் கத்தாருக்கு ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.6 லட்சம் கோடி) வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கத்தார் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி ஏற்றுமதியாளர்களில் ஒன்று என்பதால், இந்தத் தடை பல நாடுகளை நேரடியாகப் பாதிக்கும். சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கத்தாரை பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனத்திற்கான விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிசக்தி நெருக்கடியில் உள்ள நிலையில், இந்தத் தடை அவர்களுக்குப் பெரும் பின்னடைவாகும்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை ஒரே நாளில் 35% முதல் 50% வரை அதிகரித்துள்ளது. இது உலக அளவில் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது ‘ஹோர்முஸ் நீரிணை’ பகுதி போர் பதற்றத்தால் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதால், கத்தார் தனது ஏற்றுமதிக்கு ‘ஃபோர்ஸ் மெஜூர்’ எனப்படும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒப்பந்தங்களை நிறைவேற்ற இயலாமை என்ற விதியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது உலக நாடுகளை மாற்று எரிசக்தி ஆதாரங்களைத் தேடத் தூண்டியுள்ளது.

