மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 27-வது வார்டு பந்தல்குடி பகுதியில் குடிநீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் சரியாகச் செய்து தரப்படவில்லை எனக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்லூர் – யானைக்கல் பாலம் இறக்கம் சந்திப்பில் திடீரென வீதியில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியப்போக்குடனேயே செயல்பட்டு வருகின்றனர்,” எனத் தங்கள் வேதனையையும் குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.
காலை நேரத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் மறியல் போராட்டத்தால், சிம்மக்கல் கலைஞர் சிலை பகுதியிலிருந்து தத்தனேரி வரை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதன் காரணமாகக் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ-மாணவிகளும், பணிக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
போராட்டத்தின் இடையே, நோயாளி ஒருவரை ஏற்றி வந்த அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதைக் கண்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, போராட்டக்காரர்கள் உடனடியாகப் பாதை அமைத்து அந்த அவசர ஊர்தியை மட்டும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸ் சென்றதைத் தொடர்ந்து பொதுமக்கள் மீண்டும் மறியலைத் தொடர்ந்தனர். இதனால் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் காவல் நிலையப் போலீசார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலு தாய் மற்றும் போக்குவரத்து காவலர்கள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாகக் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.




