டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 747 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்படும் பகுதிகளில், கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் சேமிக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை கொசுக்கள் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். பயன்பாடற்ற டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். மேலும், வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு, பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
டெங்கு தடுப்பு என்பது அரசுத் துறைகள் மட்டுமின்றி, பொதுமக்களின் பங்களிப்புடனும் மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சியாகும். எனவே, கொசு உற்பத்தியைத் தடுக்கும் பணியில் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




