Close
செப்டம்பர் 19, 2026 8:31 காலை

அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு தின விழா

மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மனநலத் திட்டம் சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், உலக தற்கொலை தடுப்பு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு மனிதச்சங்கிலி, பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:

பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், நிதிச் சுமைகளையும் எதிர்கொண்டுதான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். உங்களுடைய எதிர்காலத்தின் மீது அவர்கள் அளப்பரிய நம்பிக்கையும் பெரும் எதிர்பார்ப்புகளையும் வைத்துள்ளனர்.

கல்லூரி வாழ்க்கை என்பது பள்ளிக்கூடக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, புதிய சுதந்திரமும் எல்லையற்ற மகிழ்ச்சியும் தரும் ஒரு பொற்காலம். நாம் நினைத்தபடி வாழ்வதும், இந்த வயதில் மனம் உற்சாகமாக இருப்பதும் மிகவும் இயல்பானது. அதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், இந்த வெளிப்புறக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால், ஒவ்வொரு மாணவரின் மனதிலும் பல்வேறு அழுத்தங்களும் இயல்பாகவே உருவாகின்றன. பள்ளியில் ஆசிரியர்களின் தொடர் வழிகாட்டுதலோடு படித்த சூழல் மாறி, கல்லூரியில் எல்லாவற்றையும் சுயமாகவே படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய புதிய முறைக்கு மாணவர்கள் பழக வேண்டியுள்ளது.

இதனுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரும் பருவத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் அரியர்ஸ் விழுந்துவிடுமோ என்ற தொடர் பயமும் பதற்றமும் அவர்களின் மனதில் தீராத மன உளைச்சலையும் கல்வி சார்ந்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில், தீவிரமான மன உளைச்சலின் காரணமாகத் திடீரென அவசரப்பட்டு எடுக்கும் ஒரு தவறான முடிவு, ஒட்டுமொத்த வாழ்க்கையையே பாழாக்கிவிடும்.

15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்த வயதில்தான் நமது மூளை மிக வேகமான வளர்ச்சி நிலைக்கு ஆட்படுகிறது.

பிரச்சினைகள் வந்தால் உங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் மனம் திறந்து விவாதியுங்கள். நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு, இந்த வயதை உங்களின் சுய முன்னேற்றத்திற்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரியில் நீங்கள் கழிக்கப்போகும் இந்த மூன்றாண்டு காலம், அதாவது ஏறத்தாழ இந்த 1000 நாட்களில் நீங்கள் உங்களை எப்படிச் செதுக்கிக் கொள்கிறீர்களோ, உங்கள் ஆளுமையை எப்படிச் செம்மைப்படுத்திக் கொள்கிறீர்களோ, அதில்தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது.

எனவே, உங்கள் கைகளில் இருக்கும் இந்த 1000 நாட்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை வளமாகவும் அழகாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் எழில், தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் ஜெயந்தி, சிஇஓ மாதவன், கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top