நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
விவசாயத்தை இயந்திரமயமாக்கும் நோக்கத்துடன், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அரசு மானியத்தில் வழங்கி வருகிறது.
ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மானியத் தொகை இவற்றில் எது குறைவே அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட மானியத் தொகை இவற்றில் எது குறைவே அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா பெற்றுள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 90 சதவீத மானியம் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
விவசாயிகள் மானியத்தில் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பெறுவதற்கு உழவர் செயலியை டவுன் லோடு செய்து, ஆதார் எண்ணை பதிவு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7ஆம் தேதி, அல்லது 15 முதல் 21 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் 8ம் தேதி மற்றும் 22ம் தேதி அன்று விண்ணப்பித்த விவசாயிகளின் விண்ணப்பங்கள், கிராம வாரியாக ஓதுக்கீடு செய்யப்பட்ட இலக்கிற்கு ஏற்றவாறு கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையங்களில் தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.




