Close
செப்டம்பர் 19, 2026 8:31 காலை

நைனாமலை மலைப்பாதையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதையில் பேருந்து போக்குவரத்து துவக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், சேலம் மெயின் ரோட்டில் உள்ள புதன்சந்தை அருகே நைனாமலை அமைந்துள்ளது. 2,600 அடி உயரம் கொண்ட இம்மலையின் உச்சியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னரால் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. கோயிலின் சில பகுதிகள் திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதாகவும் சான்றுகள் உள்ளன.

இந்த கோயிலுக்கு ஏற்கனவே குறுகிய மலைப்பாதை உள்ளது. இந்த வழியில் மொத்தம் 3,360 படிகளை நடந்து ஏறிச்சென்றால்தான், மலை உச்சியில் நின்ற நிலையிலுள்ள குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்கலாம். வெயில் நேரத்தில் மிகவும் குறுகலான படிகளில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஏறிச்செல்ல முடியாததால் பலர் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, கீழே இருந்தே மலையை நோக்கி நின்று கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுகின்றனர்.

பல்வேறு புராண சிறப்பு மிக்க நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விஷேச தினங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் அனைத்து நாட்களிலும், சனிக்கிழமைகளில் அதிகமாகவும், சேலம், நாமக்கல், ஈரோடு என 3 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து சுவாமியை வழிபட்டுச் செல்வர்.

பழைய மலைப்பாதையில், செங்குத்தான படிக்கட்டு வழியாக ஏறி கோயிலுக்கு செல்லும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோயிலுக்கு செல்ல, மலைப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்பலனாக கடந்த 2023-ம் ஆண்டு நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை உள்ள 7 கி.மீ., தொலைவிற்க்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரூ.43 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த பணி சமீபத்தில் நிறைவு பெற்று வாகனப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. புதிய மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் இனி ஆண்டு முழுவதும், திரளான பக்தர்கள் எளிதாக நைனாமலைக்கு சென்று, சாமி தரிசனம் செய்ய முடியும்.

நாளை 19ம் தேதி, புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் நைனாமலைக்கு வருவார்கள். இதையொட்டி, இன்று மலைப்பாதையில் முதல் முறையாக பேருந்து பயணத்தை தொடக்க உள்ளார்கள்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு முதலில், ரூ.13 கோடி மதிப்பில் மண் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.30 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

மொத்தம் 7 கி.மீ., தூரம் வரை புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. நாளை 19ம் தேதி சனிக்கிழமை முதல் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என கூறினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top