Close
செப்டம்பர் 19, 2026 7:06 மணி

டெங்குவை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை தமிழக அரசுக்கு கொமதேக வேண்டுகோள்

ஈஸ்வரன்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் ஏற்படும், உயிரிழப்பை கட்டுப்படுத்த, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்களோடு சேர்த்து, இதுவரை சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர். டெங்கு பரவலை தடுக்க தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் போதாது. வருமுன் காப்பதே மிகச்சிறந்தது என்பதை அரசு உணர வேண்டும். தமிழக அரசு டெங்கு பாதிப்பை தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால், தற்போது சாதாரண காய்ச்சலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சளி, இருமல், உடல் சோர்வு ஆகியவையும் பொதுமக்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. சென்னையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவுவதற்கு முன்பு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா ஆஸ்பத்திரிகளில் தேவையான சிகிச்சை வசதிகளை அதிகரிப்பதுடன், சுகாதார பணியாளர்கள் மூலம் டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top