தமிழக அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்டம் சார்பில், நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்து துவக்க விழா, நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் திலீப், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஸ் தமிழ்செல்வன் ஆகியோர் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் நகரப்பேருந்து போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, செவ்வந்திப்பட்டி வரை இயக்கப்படும், 15ஏ நகர பேருந்து, ஏ.மலைப்பட்டி வரையும், பொன்னேரி கைகாட்டி வரை இயக்கப்பட்டு வந்த 13பி நகர பேருந்து, காவக்காரன்பட்டியில் இருந்து ஈச்சவாரி, கோணங்கிப்பட்டி, எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாமக்கல் பழைய பேருந்து ஸ்டாண்டில் இருந்து, வரதராஜபுரம் வரை இயக்கப்பட்ட 13ஏ நகர பேருந்து, வரதராஜபுரத்தில் இருந்து, தலைமலைப்பட்டி அடிவாரம் வரையும், ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, நாமகிரிப்பேட்டை வரை இயக்கப்பட்ட, ஆர்.19 நகர பேருந்து, அக்கலாம்பட்டி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




