சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல்லில் 500 பேர் கலந்துகொண்ட ஜூம்பா நடன நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையொட்டி நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில், மெயின் ரோட்டில், ஜூம்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் முன் கள பணியாளர்கள், கூட்டுறவுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய்த்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 500 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடினர்.
மாவட்ட ஆட்சியர் கலெக்டர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பாடலுக்கு ஏற்ப நடனமாடி பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் டிஆர்ஓ சரவணன், நாமக்கல் ஆர்டிஓ சாந்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மல்லிகா, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, தொழிலாளர் உதவி கமிஷனர் இந்தியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, பிஆர்ஓ ராம்குமார், ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




