நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்காக, விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி, லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாய ஈடுபட்டு வருகின்றனர்.
சீசனுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்ய அரசின் இலவச மின்சாரம் மூலம் பம்பு செட்டுகளில் மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்த்து வருகின்றனர். இந்த விவசாய பணிகளுக்கு பெரும்பாலும், அதிகாலை வேளையிலும், மாலை மற்றும் இரவு நேரத்திலும், மின் மோட்டாரை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். அந்த நேரத்தில், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொது பயன்பாட்டிற்கும் மின்சாரம் அதிகளவு தேவைப்படுகிறது.
இதனால், மின்தேவை அதிகரிக்கும் நேரமாக அதிகாலை மற்றும் இரவு நேரம் கணக்கிடப்படுகிறது. அதே வேளையில், சூரிய ஒளி மின்சாரம் அதிகமாக உற்பத்தியாகி, மின்வாரியத்திற்கு கிடைக்கும் பகல் நேரத்தில் மின்தேவை குறைவாகவே இருக்கிறது.
இதை கணக்கிட்ட மின்வாரியம், சூரிய ஒளி மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்தும் வகையில், பகல் நேரத்தில் விவசாய பணிக்கான மின்மோட்டார்களை இயக்க விவசாயிகளை வலியுறுத்துகிறது. அதனால், பகலில் இலவசமாக கிடைக்கும், புதுப்பிக்க கூடிய இயற்கை வளமான சூரிய மின்ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க முடியும்.
மற்ற வளங்களைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்கவும் முடியும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில், பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை, விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை, தங்களது விவசாய மின்மோட்டார்களை, பகல் நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




