சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலாகும் இந்தக் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கம்.
இதே போல் , சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 40 மணி அளவில் வைகை ஆற்றில் இறங்கினார். இதை முன்னிட்டு அதிகாலை கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் அலங்காரத்தில் சுவாமி புறப்பட்டார். அவருக்கு வழி நெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து காலை 9.40 மணியளவில் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்குள்ள மண்டகப்படிக்கு சென்று பூஜைகள் நடைபெற்றது.

சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சந்திரன், தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். சோழவந்தான் பேரூராட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பாக அன்னதானம் நீர் மோர் வழங்கப்பட்டது. நேர்த்திக்கடன் பக்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மொட்டை போட்டுக் கொண்டனர்
இன்று மாலை, பேட்டை, முதலியார் கோட்டை, சங்கங்கோட்டை ஆகிய கிராமத்திற்கு சென்று அக்ரஹாரத்தில் உள்ள மண்டகப்பட்டிக்கு வந்து சேரும். நாளை 2ம் தேதி சனிக்கிழமை இரவு விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.
3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வட்ட பிள்ளையார் கோவில் அருகில் இருந்து பூப்பல்லக்கு வீதி உலா நடைபெற்று கோவிலை வந்து அடையும். அங்கே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு, கோவிலில் நிர்வாகம், போலீசார், பேரூராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர் விழா நடைபெறும் இடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்திருந்தனர். கோவில் நிர்வாகம், மற்றும் உபயதாரர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




