நாரைக்கிணறு கிராம மக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இளம் விவசாய சங்க தலைவர் சவுந்திரராஜன் செய்யதியாளர்களிடம் கூறியதாவது: ராசிபுரம் தாலுகா நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல், ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
எனினும் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இச்சூழலில் எங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பட்டா வழங்குவது தொடர்பாக பத்திரவுப் பதிவுதுறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் கலெக்டரும் நாரைக்கிணறு கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
எனவே தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடர்பாக மீண்டும் முடிவு செய்யப்படும் என்றார்




